விழுப்புரம்: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளை (ஜூன் 3) செம்மொழி நாளாக கொண்டாடுவோம். முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும். அறக்கட்டளை மூலம் குடிமைப்பணி பயிற்சி மையமும் நடத்தப்படும். நோயாளிகள் சிகிச்சை பெற அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும் என்றார்.
மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.
கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம். அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் உறுதியேற்க வேண்டும் என்றவர் கருணாநிதி மகன் சாதித்தான் என்பதை நிரூபிக்க நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என்றார்.
விழாவில், சிறப்பாக பணியாற்றி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கப்பட்டது.