சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என அமைச்சர் ஜெயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து அமைச்சரவை முடிவு எடுத்தது எடுத்ததுதான் அதில் எந்தவித மாற்றக் கருத்தும் இல்லை. அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டு ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
7 பேர் விடுதலை விவகாரம் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும். தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும், நேற்று, இன்று, நாளை என்று தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதே திமுகவின் கொள்கை என குற்றம்சாட்டினார்.