ஈரோடு: "நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை” என திமுக பொருளாளர் துறைமுருகன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறிவுரை பேசினார்.
மதிமுக சார்பில், பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா - வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், திமுக பொருளாளர் துறைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில், “நானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் விலாசம் பெற்றவர்கள் நாங்கள். எந்த உயரத்தில் பறந்தாலும் கருணாநிதி என்ற சக்தி எங்கள் இதயத்தில் இருப்பதால் தான் எங்களால் அரசியலில் இருக்க முடிகிறது. நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை” என அறிவுரை கூறிய துரைமுருகன், வைகோவும், தானும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு தானும் வைகோவும் நட்பு பாராட்டுவதாக துரைமுருகன் தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.