லக்னோ: மத்தியிலும் மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ள பாஜக அரசுகள், அதை மறைப்பதற்காக பல்வேறு திசைதிருப்பும் உத்திகளைக் கையாள்வதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு பாஜக அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக அரசுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அதை மறைப்பதற்காக மக்களைத் திசைதிருப்பும் உத்திகளைக் கையாள்வதாகவும், வாஜ்பாயின் மறைவை அரசியல் ஆதாயம் பெறப்பயன்படுத்த பாஜக முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவுக்கு பாஜக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குஜராத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு கும்பல் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பின்தங்கிய பிரிவினர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும், எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம். எங்களுக்கு தேர்தலில் மரியாதையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். ஒருவேளை மரியாதையான தொகுதிகள் வழங்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்று மாயாவதி கூறினார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மாயாவதியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.