திருச்சி: நாட்டில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாகவும், ஜனநாயக படுகொலை தொடர்ந்து நடைபெற்றுவதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
மத்திய பாஜக அரசின் ரஃபேல் போர் விமான ஊழலை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம், பேரணியை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
அதன்படி, திருச்சி காங்கிரஸ் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாதிலை எதிரே பேரணி, ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு பேசுகையில், கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. விமானம் ஒன்றுக்கு ரூ. 526 கோடி வீதம் 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தமானது. ஆனால், அதன் பின்னர் வந்த பாஜக ஆட்சியில் ஒரு விமானத்தை ரூ. 1,670 கோடிக்கு வாங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம், ரூ. 41 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் மோடி அரசை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பும்.
மேலும் நாட்டில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. தொடர்ந்து ஜனநாயக படுகொலை நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டினார்.