வர்தா புயல் போல் சென்னையில் பரவலாக காற்று இடியுடன் கூடிய மழை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதியம் 3 மணி முதல் வர்தா புயல் போல் காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக வெப்பச்சலனம், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவந்த நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வர்தா புயல் போல் காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் விழுந்துள்ளது. எனவே மழைக்காக மரங்களின் கீழ் ஒதுங்கா வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பாரிமுனை, மிண்ட், அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழைபெய்து வருகிறது.
திருவொற்றியூர், அமைந்தகரை, பெரம்பூர், ராயப்பேட்டை, மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புழல், செங்குன்றம், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
ஐயப்பன்தாங்கல்,காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி பகுதிகளிலும் காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் கொளத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.