திருப்பதி: திருமலையில் இன்று திங்கள்கிழமை இரவு நடைபெற உள்ள கருட சேவையைக் காண பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் மாடவீதியில் காத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய உற்சவமான கருட சேவை இன்று திங்கள்கிழமை இரவு நடைபெற உள்ளது. அதைக் காண திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர். இதையடுத்து கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இன்று காலை 10 மணி முதல் பக்தர்கள் மாடவீதியில் உள்ள பார்வையாளர் அரங்குகளில் காத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த அரங்குகளுக்குள் செல்லவும், அவற்றில் இருந்து வெளியே வரவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரங்குகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை காத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
காலை 11 மணி முதல் அரங்குகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருடசேவையை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை தர்ம தரிசனம் தவிர, அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருட சேவையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அலிபிரியை அடையும் பக்தர்களுக்கு போக்குவரத்து நிபந்தனைகள் அடங்கிய வரைபடம் அளிக்கப்படும். கருட சேவையைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகளை இயக்க ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.