சென்னை: தமிழகத்தில் தாமரை மலராது என்றும் தமிழிசையின் உயிரும் போகாது என சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பாஜக தமிழக தலைவர் தமிழிசை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்றும் வரும் அதிமுக ஆட்சியையே அசைக்க முடியாத திமுகவால், நாட்டையே ஆளும் பாஜகவை விமர்சிப்பபது நகைப்புக்குரியது.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது. இந்தியாவின் முக்கால்வாசி பகுதியில் காவி பரவி விட்டது, தமிழகத்தில் கண்டிப்பாக காவி மலரும். தமிழகத்தில் பாஜக கட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது. 22 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள மோடி ஆட்சியை அகற்ற முடியாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் தாமரையும் மலராது, தமிழிசையின் உயிரும் போகாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்களின் கிண்டல் கருத்துக்கு, என் கட்சியை அரியணை ஏற்றும் வரை மட்டுமல்ல, அதன் பிறகும் நாங்கள் உயிருடன் இருப்போம். அவர்களின் வாழ்த்து எங்களுக்குத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.