சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.
சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்றாகும். இங்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டப்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும். இந்த தண்ணீரை சேமித்து வைத்து குடிநீர் தேவைக்காக புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
இதன் அடிப்படையில் ஜூலை முதல் அக்டோபர் வரையில் 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். அதன்படி, தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திர அரசிடம் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டப்படி தண்ணீரை திறக்க கோரிக்கையும் விடுத்தனர்.
இதன்படி, கண்டலேறு அணையிலிருந்து கடந்த 22-ஆம் தேதி 200 கன அடி நீரை ஆந்திர அரசு திறந்துள்ளது.
இந்த நீர் இன்று வெள்ளிக்கிழமை (செப்.28) காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் பகுதியை வந்தடைந்தது. தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.