நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகு அதிக அளவில் பெருகி வருகின்றன. ஊடகங்களில் பதிவு செய்யப்படுவது வெகு குறைவானவையே, அதையே நாம் அதிகம் என நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நிஜத்தில் பெண்கள் இன்னும் அதிக துயரத்தில் இருக்கிறார்கள். நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முனைப்பு கூட இல்லாமலிருக்கிறது. பெண்கள் பழைய காலங்களைப் போல தங்களுக்கு நேரும் குற்றங்களை வெளியில் சொல்லத் தயங்கவேண்டியது இல்லை. பெண்கள் தங்களது துன்பங்களை வெளிப்படையாக முன்வந்து தெரிவித்தால் தான் எங்களைப் போன்ற போலீஸ்காரர்களால் அவர்களுக்கு தகுந்த நியாயத்தைப் பெற்றுத் தர முடியும். மாறாக, தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பெண்கள் வெளியில் சொல்லத் தயங்கினால் குற்றவாளிகள் தப்பிக்கும் நியாயமற்ற நிலை தான் நீடிக்கும். பெண்கள் ஆண் போலீஸ்காரர்களிடம் சில விஷயங்களைச் சொல்லத் தயங்கலாம் என்பதால் பெண் போலீஸ்காரர்களான நிர்மலா, திருமலா, நாகரத்னா, பார்கவி என நாங்கள் நால்வரும் கிட்டத்தட்ட 1,250 கிமீ தூரத்தை சைக்கிள் மூலமாகச் சுற்று வந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை புகாராகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினோம். 45 நாட்களானது எங்கள் பயணம் முடிவதற்கு. எங்கள் பயணத்திற்கிடையில் சுமார் 100 இடங்களிலாவது பயணத்தை நிறுத்தி அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்களை அணுகிப் பேசி இருப்போம் என்றனர்.
ஆந்திர மகளிர் போலீஸின் இந்தப் பிரிவுக்கு ஷி போலீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தங்களது பயணத்தைத் துவக்கிய இவர்கள் சித்தூர் மாவட்டத்தின் 57 தாலுகாக்களை கவர் செய்து கடந்த புதனன்று பயணத்தை முடித்துள்ளார்கள். பயணத்தின் போது காடுகள், மலைகள், வறண்ட தரிசு நிலங்கள் என எல்லாவற்றையுமே தைரியமாக எதிர்கொள்ளும் மனநிலையுடனே இவர்கள் பயணித்திருக்கிறார்கள்.
ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதில் ஆண், பெண் வேறுபாடு அவசியமில்லை என்றாலும், பெண்கள் தங்களது பிரச்னைகளைப் பற்றி மனம் திறக்க ஆண் போலீஸ்காரர்களைக் காட்டிலும் பெண் போலீஸ்காரர்களே பொருத்தமானவர்கள் என்று கருதியது பாராட்டத்தக்கது!