வெளிநாடுகளிலிருந்து வரும் அபாயகரமான கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது தொடர்பாக, அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தது.
அதை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளிலிருந்து வரும் அபாயகரமான கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுகின்றன. இதனால், மத்திய அரசுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கிறது. எனினும், இதன்மூலம் உருவாகும் உடல் பல பாதிப்பு உள்ளிட்ட பின்விளைவுகளை பொதுமக்கள் தான் சந்திக்க வேண்டியுள்ளது. இது மிக மிக முக்கியமான பிரச்னையாகும். விதிமுறைகளை அரசே மீறுதல் கூடாது. வெளிநாடுகளிலிருந்து வரும் அபாயகரமான கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மனுதாரர் தரப்பில் அளிக்கப்படும் தகவல்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 31-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Image courtsy: News7 chanel, youtube.