அரசு ஊழியருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை பொது தளத்தில் வெளியிடலாமா என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப். 22-இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5-இல் மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.ஏ.ஜோசப் என்பவர் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, "தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையை வெளிக் கொண்டு வர ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?' எனக் கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 9-க்கு ஒத்தி வைத்தது. இதேபோன்று, நாகை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோரும் தாக்கல் செய்திருந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கட்சியினர் 2 பேர் தவிர, சமூக ஆர்வலரும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து வழக்கு தொடருவதற்கு, அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. என்ன சந்தேகம் என்பதை ஆராய வேண்டும். அரசு ஊழியருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை பொது தளத்தில் வெளியிடலாமா? உறவினர்கள்கூட சிகிச்சை விவரங்களைக் கேட்காதபோது, அவற்றை வெளியிட முடியுமா என்பது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, ஜெயலலிதாவின் உடலைப் பாதுகாக்க கோரிய டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனு ஏற்கத்தக்கல்ல என்பதால், அதை தள்ளுபடி செய்கிறோம் என்றனர். இதையடுத்து, பிப்ரவரி 23-க்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.