மாணவர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள 2 மணி நேரம் கால அவகாசம் கேட்டும் அதைப் பொருட்படுத்தாது காவல்துறையினர் மாணவர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், மாணவர்கள் மீது தடியடி நடத்தியும் மாணவர்களைக் கலைக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? என தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த காவல்துறை ஆணையர்;
“மாணவர்களுக்கு அவகாசம் தரவில்லை என்பது தவறான செய்தி. நேற்று பிற்பகலில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களிடம், சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் நிரந்தரமாக்கப்பட உள்ளதால் தொடர்ந்து போராட்டத்தை கைவிடும்படியும், கலைந்து செல்லும் படியும், நாங்கள் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். இதுவரை மாணவர்கள் போராடத்தை கைவிடவில்லை. இப்போதும் நாங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் காவல்துறையின் அடக்குமுறை கண்டு வெகுண்ட மாணவர்களில் சிலர் கடலில் இறங்கி விட்டனர். மேலும் கடற்கரை மற்றும் கடற்கரைச்சாலையில் இருந்த மக்களையும் காவல்துறையினர் அப்புறப் படுத்த முயன்று கொண்டிருப்பதால் பொதுமக்களிடையேயும் பதற்றம் பரவி வருகிறது. சில இடங்களில் மாணவர்களுக்கு சாதகமாக பொதுமக்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசிப் போராடும் சூழலும் நிலவி வருகிறது.இதனால் அதிகப்படியான காவல்துறையினர் மெரினாவில் குவிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் சில இடங்களில் பதற்றம் நிலவுகிறது.