பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களை ரஷியா, சீனா மூலம் இந்தியா ஊக்குவிக்கிறது என ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது கூறியதாக வெளியிடப்பட்ட அறிக்கை அந்த நாட்டில் அதிர்ச்சி அலையை எழுப்பியது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீது, "பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டி வருவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவை ரஷியா, சீனா உதவியுடன் பாகிஸ்தான் நிர்பந்திக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
எனினும், இதுகுறித்து அவர் தலைமையில் செயல்படும் ஜமாத்-உத்-தாவா அமைப்பு வெளியிட்ட ஆங்கில அறிக்கையில், "ரஷியா, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டி வருவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் நிர்பந்திக்க வேண்டும்' என்று கூறியதாக தவறாகக் குறிப்பிடப்பட்டது. இது, பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அதையடுத்து, ஜமாத்-உத்-தாவா அளித்த விளக்கத்தில், "இந்தியாவிடம் தங்களுக்குள்ள செல்வாக்கை ரஷியாவும், சீனாவும் பயன்படுத்தி, பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தூண்டாமல் தடுக்க வேண்டும். அதற்கு ரஷியா, சீனாவுக்கு பாகிஸ்தான் அழுத்தம் தர வேண்டும்' என்று ஹஃபீஸ் சயீது கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, காஷ்மீருக்கு விடுதலை அளிக்கும்வரை இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் துண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.