ஏற்கெனவே ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயத்தில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் சிக்கனம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு செயலர் மாருதி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் திருநாவுக்கரசு பேசியதாவது: தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு சேமிக்க வேண்டும். இதன் அடிப்படையில் மார்ச் 22-இல் சர்வதேச தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது. கோள்களில் பூமியில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிலும் 30 சதவீதம் நிலப்பரப்பும், 70 சதவீதம் நீர்பரப்பும் ஆகும். அந்த 30 சதவீத நிலப்பரப்பில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான நீரை அளிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் பொதுமக்கள் தண்ணீரை அதிகம் வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இதை தவிர்க்க ஏற்கெனவே பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தண்ணீர் சேகரிப்பு குறித்து ஆசிரியர் நாகராஜன், பயிற்றுநர் சத்யா, மாணவர் சூர்யா ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் ஹரிஹரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.