சென்னையில் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உணவு பாதுகாப்புச் சட்டப்படி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவு வணிகர்கள், சட்ட விதிகளை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள உணவு கலப்படங்கள்: கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் ரசாயன மருந்துகள் பயன்படுத்திய பழங்கள்,காய்கறிகள், செயற்கையான வண்ணங்கள் பயன்படுத்திய தேயிலை இலைகளை விற்பனை செய்வது குற்றம்.
உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில், பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களைக் கட்டித் தருவது, பயன்படுத்திய எண்ணெயை அடுத்த முறை பயன்படுத்துவது, ஐஎஸ்ஐ முத்திரையில்லாத குடிநீர் கேன்கள் மற்றும் அக்மார்க் முத்திரையில்லாத நெய் பொருட்கள்,மூடி வைக்காத திண்பண்டங்கள் விற்பனை செய்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.