உத்தர பிரதேசத்தின் புது முதல்வரான யோகி ஆதித்ய நாத்தை நோக்கி சவால் விட்டிருக்கிறார் பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ். என்ன சவால் தெரியுமா? யோகி ஆதித்யநாத், ஒரு துறவி, அவர் நிஜமாகவே மதத்துக்கு வக்காலத்து வாங்கக் கூடிய நிஜமான துறவியாக இருப்பாரானால், பொது மக்களது உடல் நலனுக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கக் கூடியதான மதுவுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும். நாங்கள் பிகாரில் அப்படித்தானே தடை விதித்திருக்கிறோம், அதை ஏன் அவர் உத்தரப் பிரதேசத்தில் செய்யக் கூடாது?
யோகி ஆதித்யநாத்துக்கு தைரியமிருந்தால், இப்படியான ’ஆண்ட்டி ரோமியோ ஸ்குவாட்கள்’ (பெண்களுக்கு எதிரான பலாத்காரச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து தண்டிக்கும் அமைப்பு) அமைத்து மக்களை திசை திருப்புவதைக் காட்டிலும் உத்தரப் பிரதேசத்தின் முக்கியப் பிரச்சினையான மது மற்றும் போதை தடுப்பு விவகாரத்தில் பிகாரைப் போல நிரந்தர தடை கொண்டு வர வேண்டியது தானே! என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேஜஸ்வி பிகார் துணைமுதல்வர் மட்டும் அல்ல, பிகார் முன்னாள் முதல்வர் மற்றும் ரயில்வே அமைச்சராகவும் இருந்தவரான லாலு பிரசாத் யாதவின் மகனும் ஆவார்.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் லாலுவும், நிதிஷ் குமாரும் வைத்த கூட்டணியில் ஜெயித்து தான் தேஜஸ்வி துணை முதல்வர் ஆனார். மேலும் இவர்களது கூட்டணி ஆட்சியில், பிகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுதும் மதுவுக்கு நிரந்தர தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அது நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்க விசயம்!