ஹரியானாவில் பாலியல் வழக்கில் சிக்கி தற்போது 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்றுள்ள தேரா சாச்சா செளதா சீக்கிய மடத்தின் தலைவரான ராம் ரஹீம், நீதிமன்ற விசாரணையின் போதும், குற்றத்திலிருந்து தப்பிக்கப் பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று தான், தனக்குத் தானே ஆண்மையற்றவர் என்று சூட்டிக் கொண்ட பட்டம். 1990 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு ஆண்மைக் குறைபாடு இருந்து வருவதாக ராம் ரஹீம் காவல்துறையிடம் கூறியிருக்கிறார். ஆனால் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் இருந்த இரு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் ஐயத்திற்கிடமின்றி போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு விட்டதால், அவரது பொய்களை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி; உடனடியாக ராம் ரஹீமிடம்,
‘நீங்கள் ஆண்மையற்றவர் என்றால், உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் எப்படிப் பிறந்தார்கள்?”
- என்று சடாரென பதிலடி கொடுத்து விட்டார்.
ஆண்மையற்றவர் என்பது மட்டுமல்ல, தான் மனரீதியாகவும் சரியான ஆரோக்யத்தில் இல்லை, மனநலம் சார்ந்த பிரச்னைகளும் தனக்கு இருப்பதால் தன்னை மன்னித்து விடுதலை செய்யுமாறும் கூட ராம் ரஹீம் காவல்துறையினர் மற்றும் நீதிபதியின் முன்னால் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதியோ, அவர் சொன்ன எந்தவிதமான தப்பித்தல் உபாயங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் ஆகஸ்டு 25 ஆம் நாள் ராம் ரஹீம் பாலியல் குற்றவாளி தான் எனும் தீர்ப்பை உறுதி செய்தார்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி ராம் ரஹீமின் தண்டனை உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக தேரா சாச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் கடுமையான கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டார்கள். 250 பேர் படுகாயமடைந்தார்கள்.
இவற்றையெல்லாம் அறிந்த சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங், கலவரத்தைக் காரணம் காட்டி ராம் ரஹீமை, வெறும் பாலியல் குற்றவாளியாக மட்டுமே கருதாமல் அவரை ஒரு காட்டு மிருகம் என வர்ணித்து 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் உறுதி செய்தார். அவரது தீர்ப்பின் படி தற்போது ராம் ரஹீம் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதியின் கூற்றுப்படி எந்த ஒரு பாலியல் குற்றவாளியுமே கருணைக்குரியவர் அல்ல’ அவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படத் தகுதியானவர்களே’ என்பது உறுதியானது.
ஆளும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததோடு, பிரதமர் மோடி முதல் ஹரியானா முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்க நபராக இருந்த ஒருவருக்கு இப்படி ஒரு வரலாற்றுப்பிரசித்தி பெற்ற தீர்ப்பை வழங்கியவரான சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தத் தீர்ப்பின் வாயிலாக உயிராபத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கருதியதால், அவருக்குத் தற்போது z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு இனி வாகனங்கள் விற்பனை கூடாதென போக்குவரத்து கமிஷனர் உத்தரவு!
திறந்தவெளியில் மலம் கழித்தால், வீட்டுக்கு மின்சாரம் ரத்து... ஸ்வச் பாரத் மிரட்டல்!
மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலைதடுமாறி மாடியிலிருந்து விழுந்து இறந்த ஆசிரியை!
கணவனின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற மனைவி! மீண்டுமொரு டாஸ்மாக் அவலம்!
அரசுப் பள்ளி ஆசிரியைகள், பணியிடத்தில் சுரிதார் அணிய அனுமதி மறுப்பு!