கின்னஸ் சாதனை படைத்த தெலுங்குப் பாடகர் ‘கஜல் ஸ்ரீனிவாஸ்’ பாலியல் வன்முறை வழக்கில் கைது!

புகாரளித்தவரை மட்டுமல்ல, மேலும் பல பெண் அலுவலர்களையும் கஜல் ஸ்ரீனிவாஸ் இதே விதமாக பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தி மறுப்பவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைத்தல், அறிவிப்பின்றி வேலையை
கின்னஸ் சாதனை படைத்த தெலுங்குப் பாடகர் ‘கஜல் ஸ்ரீனிவாஸ்’ பாலியல் வன்முறை வழக்கில் கைது!

கேசிராஜு ஸ்ரீனிவாஸ் எனும் பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ் தெலுங்கில் பிரபலமான பாடகர் மட்டுமல்ல, ஆலயவாணி வெப் ரேடியோ கம்பெனியின் புரோகிராம் ஹெட்டாகவும் இருப்பவர் அவரே! இருநாட்களுக்கு முன் 29 வயதுப் பெண் ஒருவர், பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ் நெடுநாட்களாக தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்து வருவதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் புஞ்சகுட்டா காவல்துறையினரால் அன்றே கைது செய்யப்பட்ட பாடகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ் 2008 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி நினைவைப் போற்றும் விதமாக தனது ஒரே இசைக்கச்சேரியில் சுமார் 76 வித்யாசமான மொழிகளில் பாடல்களைப் பாடி பதிவு செய்து கின்னஸ் சாதனைப் பெருமையைப் பெற்றவர். 

தற்போது அவர்மீதான இந்த பாலியல் வழக்கை ஒட்டி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை தங்களது பிராண்ட் அம்பாஸிடராகப் பயன்படுத்த விரும்பவில்லை என ‘உலகளாவிய இந்து பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் கோயில்கள் பாதுகாப்பு அமைப்பு’ அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் பிரதான நோக்கமே இந்துக் கோயில்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது தான். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பர்யமிக்க கோயில்களை மீட்டு அவற்றின் உயர்ந்த ஒழுக்கநெறிகளையும், நெறிக்கோட்பாடுகளையும் நிலைநிறுத்துவதும், பாதுகாப்பதுமே இவ்வமைப்பின் நோக்கமாக இருந்தது. அதன் காரணமாகத்தான் தங்களது ‘ஆலயவாணி’ நெப் ரேடியோவுக்கு கேசிராஜு அலைஸ் கஜல் ஸ்ரீனிவாஸை புரோகிராம் ஹெட் ஆக நியமித்திருந்தனர். ஆனால், அவர் தனது அதிகாரத்தையும், பதவியையும் துஷ்பிரயோகம் செய்து, நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ரேடியோ ஜாக்கி ஒருவருக்கு நெடுநாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது அதிர்ச்சிகரமான விஷயம். அதைத் தங்களால் ஒருபோதும் சகித்துக் கொள்ளவே முடியாது. எனவே எவ்வித முன்னறிவிப்பும் இன்று அவரை எங்கள் அமைப்பிலிருந்து விலக்குகிறோம் என இந்து பாரம்பர்ய அமைப்பு அறிவித்துள்ளது.

கஜல் ஸ்ரீனிவாஸ் மீது கடந்தாண்டு டிசம்பர் 29 ஆம் தேதி புகாரளித்துள்ள இளம்பெண் அதற்கு சாட்சியாக அவர் முறைகேடாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரப் பதிவுகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். அதனடிப்படையில் கஜல் ஸ்ரீனிவாசை டிசம்பர் 2 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவரை ஜனவரி 12 வரை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாடகருக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள வீடியோவில், கஜல் ஸ்ரீனிவாஸுக்கு பெண்ணொருவர் மசாஜ் செய்வதைப் போன்ற காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. புகாரளித்தவரை மட்டுமல்ல, மேலும் பல பெண் அலுவலர்களையும் கஜல் ஸ்ரீனிவாஸ் இதே விதமாக பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தி மறுப்பவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைத்தல், அறிவிப்பின்றி வேலையை விட்டு நிறுத்துதல் போன்ற மிரட்டல் வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இத்தனை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரும் கஜல் தன்னைப் பற்றி கூறுவதென்னவோ, ‘தான் தன்னிடம் பணிபுரிந்து அனைத்துப் பெண் அலுவலர்களையும் தனது மகளைப் போலவே தான் மரியாதையுடன் நடத்தியதாகக் கூறியுள்ளார்’.

தற்போது காவல்துறை கஸ்டடியில் இருக்கும் கஜல் ஸ்ரீனிவாஸுக்கு வயது 51.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com