பெற்றோர் அனுமதியின்றி திருமணப் பதிவு இல்லை என்பது சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிரான செயல்: கனிமொழி

இம்மாதிரியான அணுகுமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுமாயின் நாடு சிறிது, சிறிதாக சாதியவாதிகளின், மதவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தான் தருகிறது என்றும் குறிப்பிட்டார்.
பெற்றோர் அனுமதியின்றி திருமணப் பதிவு இல்லை என்பது சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிரான செயல்: கனிமொழி

இந்து திருமண சட்டத்தின்படி, திருமண வயது வந்த ஆணோ, பெண்ணோ தங்களுக்கு விருப்பமுள்ள ஆணையோ, பெண்ணையோ முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு பெற்றோர் அல்லது உறவினர்களின் சம்மதம் தேவையில்லை. மணமக்கள் இருவரும் போதிய ஆவணங்களுடன் சென்று பதிவுத் திருமணம் செய்ய வகையிருந்தது. ஆனால்,

இனி பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்புவோருக்குப் பெற்றோர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் பதிவுத் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் இந்து திருமணங்களைப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி இந்து திருமணத்தை பதிவு செய்ய மணமக்கள் தரப்பிலிருந்து; 

1.அவர்களது பெற்றோர் மற்றும் சாட்சியாளர்கள் ஆகியோரது ஒரிஜினல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

2. விண்ணப்பத்தில், குறிப்பிட்டுள்ள பெற்றோரின் பெயர், முகவரி ஆகியவற்றை சமர்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்த பிறகே திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

3. பெற்றோர் உயிரிழந்ததாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் புகைப்படத்துடன் அவகளது ஒரிஜினல் இறப்புச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். 

இதில் ‘பெற்றோரின் அனுமதி தேவை’ என்பது கட்டாயமில்லை என்றாலும், பெற்றோரின் ஒரிஜினல் அடையாள அட்டை இன்றியோ அல்லது பெற்றோர் இறந்திருந்தால் அவர்களது ஒரிஜினல் இறப்புச் சான்றிதழ் இன்றியோ திருமணத்தை பதிவு செய்ய முடியாது.

கனிமொழி கருத்து...

பதிவுத் திருமணமுறையில் இம்மாதிரியான கண்டிப்பான அணுகுமுறைகளை திருமணப் பதிவுத் துறை பின்பற்றுமானால் அது சாதி, அந்தஸ்து, பேதங்களை வன்மையாகக் கண்டிக்கும் கலப்புத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களுக்கு எதிரான அணுகுமுறையாகவே அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்துப் பேசுகையில்; இந்து பதிவுத் திருமணங்களில் இம்மாதிரியான அணுகுமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுமாயின் நாடு சிறிது, சிறிதாக சாதியவாதிகளின், மதவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தான் தருகிறது என்றும் குறிப்பிட்டார்.

பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சாதிமறுப்புத்திருமணங்களை அனைத்துப் பெற்றோர்களும் ஏற்றுக் கொள்வார்களா? அப்படி ஏற்றுக் கொள்ளாத பெற்றோரிடம் போய் பதிவுத் திருமணத்துக்கான ஆவணங்களை எப்படிக் கோர முடியும்?! என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com