இத்தகைய சூழலில், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் சேர்வதாக தமிழக அரசு அறிவித்திருப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு, வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வோருக்கான அரிசி விலையை கிலோ 8.30 ரூபாயிலிருந்து, ரூ.22.54 ஆக உயர்த்தியது. அதுமட்டுமின்றி, உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் நிபந்தனைகளை ஏற்று இந்த திட்டத்தில் இணையும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு பணிந்து தான் இத்திட்டத்தில் அரசு இணைந்ததாகவும் கூறப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்ததன் மூலம், உணவு சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் உரிமையை மத்திய அரசிடம் தமிழக அரசு தாரைவார்த்துள்ளது. இது தமிழகத்தின் சுயாட்சி உரிமைக்கு வைக்கப்பட்ட வேட்டு ஆகும்.