ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி மற்றும் மதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
விபத்தில் காயமடைந்து மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொறியாளர் நாகராஜை வியாழக்கிழமை மாலை சந்தித்து வைகோ நலம் விசாரித்தார்.
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படியும், மக்கள் நலனுக்காகவும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். மதவாத சக்திகள் திராவிட இயக்கங்களை அழிக்க முயற்சிக்கின்றன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆளும் அதிமுக தரப்பிலும், சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் வெற்றியை பணமே தீர்மானித்துள்ளது. அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது குறித்தும், மதிமுக கூட்டணியில் இடம் பெற்றது குறித்தும் மு.க.அழகிரி கூறிய கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996 ஆம் ஆண்டு கூறியபடியே அரசியல் நிலை ஏற்பட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை. மேலும் அவரது அறிவிப்பு என்னவென்று தெரியாமல் கருத்துக் கூற இயலாது என்றார்.
பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலர் புதூர் மு.பூமிநாதன், மாநில தொழிற்சங்க இணைப் பொதுச்செயலர் எஸ்.மகபூப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.