பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை புதன்கிழமை இரவு திடீரென ராஜினாமா செய்தார்.
லாலு பிராசத் யாதவ் கடந்த 2006-ம் ஆண்டு ரயில்வே ஹோட்டல்களை வாடகைக்கு விட்டதில் ஊழல் செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து துணை முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இதனை லாலு தரப்பு மறுத்து வந்தது.
இந்நிலையில், பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் திடீரென புதன்கிழமை இரவு அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில் பிகாரில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.