கண்ணடிப்போர் சங்கத்திற்கு ராகுலை அழைக்கிறாரா பிரியா வாரியர்?

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது.
கண்ணடிப்போர் சங்கத்திற்கு ராகுலை அழைக்கிறாரா பிரியா வாரியர்?

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது, பிரதமரின் வெளிநாடு பயணம், கருப்பு பணம், பணமதிப்பிழப்பு குறித்து பேசிய ராகுல், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நம்பினார்கள். வேலைவாய்ப்பை அதிகரித்துத்தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், 24 மணி நேரத்துக்கு 400 பேருக்கு மட்டுமே மோடி அரசாங்கம் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும்; அதை அவர் தவிர்க்கிறார். பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது. நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம்' என ராகுல் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுலின் இந்த அனல் பறக்கும் பேச்சின் முடிவில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மோடியின் இருக்கைக்குச் சென்ற ராகுல், அவரை கட்டித்தழுவினார். தனது இருக்கைக்கு சென்ற ராகுலை மோடி அழைத்து கைகுலுக்கி காதில் ஏதோ முணுமுணுத்தார். பின்னர், தனது இருக்கைக்கு திரும்பிய ராகுல், எனது செயல்தான், ஒரு ஹிந்துவின் அடையாளம்' என்று கூறி அமர்ந்தார். அப்போது, சோனியா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், கரவொலி எழுப்பியும் மேஜையை தட்டியும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது, அருகில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து அவர் கண் சிமிட்டினார். ராகுலின் இந்தச் செயல், நேற்று மக்கள் மத்தியில் பெரும் ட்ரெண்டானது. அதுமட்டுமல்லாமல், செய்தித்தாள், ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது.

மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் 'கண்ணடிப்போர் சங்கத்திற்கு' ஒரு புதிய நல்வரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்கப்படுகிறார் என்று சமூக வலைத்தளங்கள் பகடி செய்து வருகின்றன. ராகுல் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததும் அதன் பிறகு தன் இருக்கையில் அமர்ந்தபின் கண் சிமிட்டியதைப் போலவே ஏற்கனவே ஒரே இரவில் கண்ணடித்தும் புகழ் பெற்றவராக ப்ரியா வாரியர் இருந்துள்ளார். இந்த இரண்டு செயல்களும் ஒத்திசைவாய் இருந்தைச் சுட்டிக் காட்டி கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

முதலில் இது குறித்து எந்தக் கருத்தையும் சொல்லாத ப்ரியா பிரகாஷ் வாரியர், 'ராகுல் காந்தி நம் பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்றத்தில் கட்டி அணைத்தார் என்ற செய்தியை கல்லூரியில் இருந்து திரும்பி வந்ததும் செய்திகளில் பார்த்தேன். இந்த அவரின் செய்கை மிகவும் இனிமையானது, எனக்கு சினிமா உலகில் வரவேற்பை அளித்ததும் அதுதான். ஆமாம், இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று ப்ரியா ANI-யிடம் கூறினார்.

ப்ரியா ப்ரகாஷ் வாரியர் சமூக ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாகிவிட்டார். நெட்டிசன்கள் ப்ரியாவின் கண்ணடிப்பு மற்றும் ராகுலின் கண் சிமிட்டல் பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு ப்ரியா தனது மலையாள படமான ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். அது இணையம் முழுவதும் பரவி வைரலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com