பங்களாதேஷ், டாக்கா ரயில்நிலையத்தில் இந்தியப் பெண்ணொருவர் ரயில்நிலைய கழிவறையில் குழந்தை பெற்றார். ரோக்ஷனா அக்தர் எனும் 30 வயது இந்தியப் பெண் அந்நாட்டின் தலைநகர் டாக்கா ரயில்நிலையக் கழிவறையில் குழந்தை பெற்றார். இளம்பெண், கழிவறையில் குழந்தை பெற்றதைக் கண்ட ரயில்நிலைய ஊழியர்கள் விஷயத்தை கமலாபூர் ரயில் நிலையப் பொறுப்பாளரான யாசின் ஃபாரூக்கிடம் எடுத்துச் செல்ல திங்களன்று இரவு தாயும், சேயும் உடனடியாக அருகிலிருந்த முக்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அங்கிருந்து டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம்பெயர்ந்தனர்.
ரோக்ஷனாவின் கணவர் அப்துல், பங்களாதேஷில் பிறந்தவர் என்றாலும் வியாபார நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த காலத்தில் ரோக்ஷனாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் மனைவியை பங்களாதேஷ் அழைத்துச் சென்ற அப்துல், அங்கு தனது சகோதரியின் இல்லத்தில் ரோக்ஷனாவைத் தங்க வைத்திருக்கிறார். ஆனால், என்ன காரணத்தாலோ சில நாட்களுக்கு முன்பு மனைவியின் பாஸ்போர்ட்டைத் திருடிக் கொண்டு காணாமல் போன அப்துல் அதன் பின் அவருடன் தொடர்பில் இல்லை எனத் தெரிகிறது. என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.