உங்களுக்கு இந்தப் பழக்கம் எப்போதாவது இருந்தது உண்டா?

சுந்தர ராமசாமியின் சிறுகதை ஒன்றை அண்மையில் வாசித்தேன். ஸ்டாம்ப் சேகரிப்பதில்
உங்களுக்கு இந்தப் பழக்கம் எப்போதாவது இருந்தது உண்டா?

சுந்தர ராமசாமியின் சிறுகதை ஒன்றை அண்மையில் வாசித்தேன். ஸ்டாம்ப் சேகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடும் சிறுவன் ஒருவனை பற்றியது அந்தக் கதை. பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது என்றாலும் கதை மனதில் பசை போல ஒட்டிக்கொண்டுவிட்டது. சிறுவயது முதலே ஸ்டாம்ப் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் குமாரை அவனது பள்ளியே கதாநாயகனைப்போல வியந்து போற்றுகிறது. அவனிடம் உள்ள அரிதிலும் அரிதான ஸ்டாம்புகளை காண்பதற்காகவே அவனை சுற்றி எப்போதும் சிலர் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் குமாருக்கு தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டாம்புகளின் மீது அலாதியான பிரியமும், பெருமிதமும் உண்டாகிறது.

இந்நிலையில் அதே வகுப்பில் பயிலும் ரமேஷுக்கு, வெளிநாட்டிலிருந்து வரும் அவனது மாமா ஒரு புதிய ஸ்டாம்ப் புத்தகத்தை கொடுக்கிறார். குமாரிடம் இல்லாத புதிய வகையிலான பல ஸ்டாம்புகள் அந்த புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. இதனால் குமாரின் இமேஜ் சட்டென்று பள்ளியில் சரிந்து, எல்லோரும் இப்போது ரமேஷை பின் தொடந்து செல்கின்றனர்.

மாணவர்களின் இந்த திடீர் மாற்றம் குமாரை உருக்குலைய செய்து விடுகிறது. அவன் ரமேஷின் ஸ்டாம்ப் புத்தகத்தை திருடி தீயில் போட்டு எரித்து விடுகிறான். ஸ்டாம்ப் புத்தகத்தை காணாமல் அவதியுறும் ரமேஷ் இரு தினங்களாக அதையே நினைத்து அழுது கொண்டிருக்கிறான். அவனது அழுகை குமாரின் மனதை வாட்டியெடுக்கிறது. இதனால் தான் சிறுவயது முதலாக சேகரித்து வைத்திருந்த ஸ்டாம்ப் புத்தகத்தை ரமேஷிடமே கொடுத்துவிட்டு தன் வீட்டின் படுக்கையில் கவிழ்ந்து அழுகிறான் என்பதாக கதை முடிகிறது.



சிறுவயதில் நம் எல்லோருமே இப்படியாக எதன் மீதாவது மோகம் கொண்டு, அதனை சேகரித்து பாதுகாப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம்தானே. எனக்கும் அப்படி ஸ்டாம்ப் சேகரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு பெரிய ஆல்பம் ஒன்றை தயார் செய்து தோழியர் உறவினர் என யாருக்கு வெளிநாட்டிலிருந்து கடிதம் வந்தாலும் உடனடியாக எனக்குத் தரச் சொல்வேன். ஸ்டாம்ப் மட்டுமல்லாமல் பள்ளியில் நடக்கும் போது என் கண்கள் பெரும்பாலும் தரையில் தான் இருக்கும். காரணம் அப்போது நான் மாக்னெட் சேகரிப்பதிலும் ஈடுபட்டிருந்தேன். 

காந்தம் மட்டுமல்ல, சோழி, சிறிய சிற்பம், பறவையின் இறகுகள், சிப்பி, கண்ணாடி வளையல் துண்டு என என் சேகரிப்புக்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் காந்தத்தின் மீதான காந்தம் மட்டும் தனித்துவமாக என்னுடன் தொடர்ந்து வந்தது. 

திடிரென்று தெருவில் அல்லது பள்ளி மைதானத்தில் சிறியதாக ஒரு காந்தம் கண்களுக்கு அகப்பட்டாலும் உடனடியாக காம்பெஸை எடுத்து அது காந்தம்தானா என்பதை உறுதி செய்தபின் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வேன். சிறியதும் பெரியதுமாக பல்வேறு வடிவங்களில் சேகரிப்பட்ட அந்த காந்தங்களை வைத்து விளையாடுவதும் சிலவற்றை ஜியாமெட்ரி பாக்ஸில் போட்டு வைப்பதும் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இன்றும் கூட என்னுடைய பீரோவில் ஒருசில காந்தங்கள் எனது பால்யத்தின் நினைவுகளாக அசையாமல் ஒரு காலத்தை தனக்குள் தேக்கி வைத்தவாறு உள்ளது.

ஸ்டாம்ப் சேகரிப்பைப் போல சிறுவயது முதல் நாணயம் சேகரிப்பதில் அதீத ஆர்வமிருந்தது. என் பாட்டியிடம் பெற்ற அந்தக் கால நாணயங்களில் ஆரம்பித்து வெளிநாட்டு சில்லறைகள் வரை என்னுடைய சேகரிப்பில் இருந்தன. ராசிக்கல் மோதிரம் விற்கும் தாத்தா ஒருவரிடமிருந்த எண்ணற்ற நாணயங்களை பார்த்ததிலிருந்து நானும் அங்குமிங்கும் அலைந்தும், அப்பா வெளிநாட்டில் வாழும் சில நண்பர்களின் பேருதவியாலும் சில நாணயங்களை சேகரிக்கத் துவங்கினேன். ஓட்டை காலணாவிலிருந்து, ஒரு பைசா, ரெண்டு பைசா என்று பழங்கால இந்திய நாணயங்களும், யாரிடமுமே கிடைக்க வாய்ப்பில்லாத தென் ஆப்பிரிக்கா, சாம்பியா போன்ற வெளிநாட்டு நாணயங்களும் என்னிடம் இருந்தன.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் சேகரித்து வைத்திருந்த நாணயங்களை, நான் இன்னொரு பள்ளிக்கு மாற்றலாகி வந்துவிட்ட பிறகு, பழைய பள்ளியில் என்னுடன் படித்த உஷா எனும் தோழி புது வீட்டை தேடிப் பிடித்து வந்து அறிவியல் கண்காட்சி ஒன்றில் வைக்க என் நாணயங்கள் வேண்டும் என்றதும் எதையும் யோசிக்காது அப்படியே கொடுத்து விட்டேன். தோழியை பார்த்ததும் நாணயங்கள் மதிப்பிழந்துப் போய்விட்டன. ஆனால் அதன் பிறகு எத்தனையோ நாள் நாம் ஏன் அப்படி மொத்தமாக அனைத்தையும் கொடுத்து விட்டோம் என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். சில தினங்களில் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் காலம் அவற்றை மறக்கடித்துவிட்டது.

தற்போது அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தும் ஒரு முப்பது நாணயங்கள் என்னிடம் சேர்ந்துவிட்டன. அதிலும் அன்றைய காலத்தில் புழக்கத்திலிருந்த அரை ரூபாய் நாணயமெல்லாம் மூன்றுக்கும்மேல் சேர்ந்துவிட்டது. சுந்தர ராமசாமியின் இந்த சிறுகதை நாணயங்களை சேகரிக்கும் எண்ணத்தை மீட்டெடுத்ததோ இல்லையோ.. இருக்கின்ற நாணயங்களை பத்திரப்படுத்த வேண்டுமென்ற உணர்வை தூண்டிவிட்டிருக்கிறது.  நாணயம் என்பது வெறும் சில்லறைகள் இல்லை அவை நினைவின் மீட்டல்கள், கடந்த காலத்தின் எச்சம். காசே தான் கடவுளடா என்று நினைக்கும் உலகத்தில் இந்தச் செல்லா காசுகளை கூட விரும்பும் என் போன்ற நபர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com