தினமும் வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்பவர்களுக்கு தோலின் நிறம் கருமையாக மாறிவிடும். அதைத் தடுப்பதற்கு சில எளிய வழிகள் இதோ:
வெயிலில் சென்று விடு திரும்பியதும், கை, கால்களை கழுவிவிட்டு ப்ரிஜ்ஜில் உள்ள ஐஸ் கட்டிகள் சிலவற்றை எடுத்து மெல்லிய காட்டன் துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.
காலை குளிக்கச் செல்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்து முகம், கை, கால்களில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து பின்பு குளிக்கலாம். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால், இது வெயிலால் உண்டாகும் சருமப் பிரச்னைகளைத் தீர்த்து, தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
கை, கால்களில் வெயிலினால் கருமையாக மாறியுள்ள இடங்களில் தேனை தடவி 10 நிமிடம் வைத்திருந்து கழுவி வர விரைவில் பழைய நிறத்திற்கு மாறிவிடும்.
க்ரீன் டீயை கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின் பஞ்சினால் கருமையான இடங்களில் ஒத்தடம் கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.
தயிரை சருமம் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தடவி காயவிட்டு, பின் வெது வெதுப்பான நீரில் கழுவினால் கருந்திட்டுக்கள் மறைந்து சருமம் மென்மையாகும். சருமத் தொற்றுகளும் ஏற்படாது.
தினமும் குளிக்கச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு தேங்காய் எண்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் தடவி, உலர விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வெயிலின் தாக்கத்தினால் நிறம் மாறாமல் இருக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு சரும எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே, முட்டை வெள்ளைக்கருவை தனியாக எடுத்து நேரடியாக சருமத்தில் தடவி வர, சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், சருமம் சிவந்து இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடும். வெறும் வெள்ளைக்கரு மட்டுமில்லாமல் இதனுடன் சிறிது தேனும் கலந்து பயன்படுத்தலாம்.