தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழம் - 1
தேன் - 1 டீ ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்
பேசில் விதைகள் - 1/2 டீ ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
பாப்சிகல் மோல்டுகள் - 4 அல்லது 5
ஐஸ்கிரீம் ஸ்டிக்குகள் - 4 அல்லது 5
செய்முறை:
ஆரஞ்சுப் பழத்தை நன்கு கழுவி தோல், விதை நீக்கி விட்டு உரித்து வைக்கவும், எலுமிச்சையை சாறு பிழிந்து 2 டீஸ் ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும், உறித்த ஆரஞ்சுப் பழத்தை எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஜூஸரில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் 1 டீ ஸ்பூன் தேன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் விதம் விதமான வடிவங்களில் பாப்சிகல் மோல்டுகள் கிடைக்கும். அவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். மோல்டுகள் இல்லா விட்டாலும் கவலையில்லை, விருந்தினர் வந்தால் காப்பி தருவதற்கென்றே பிரத்யேகமாக சுண்டு விரல் சைஸில் குட்டியான காப்பி டம்ளர்கள் வைத்திருப்போமே அதில் முதலில் பேசில் விதைகளை போட்டு அதன் மேல் அரைத்த ஜூஸை ஊற்றி 8 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து எடுக்கவும்.
பாப்சிகல் தயாரானதும் ஐஸ்கிரீம் ஸ்டிக்குகள் எடுத்து டம்ளர்களில் சொருக வேண்டும். பின்பு மோல்ட்டுகளில் இருந்து பாப்சிகளை பிரித்தெடுக்க எளிமையான முறை கிச்சன் சிங்க் குழாயை திறந்து வைத்து ஓடும் நீரில் மோல்டுகளை பின்புற வாக்கில் காட்டினால் போதும், பாப்சிகல் தனியாகப் பிரிந்து வந்து விடும். இப்போது ஆரஞ்சு குச்சி ஐஸ் கச்சிதமாக தயாராகி விட்டது.
குறிப்பு:
பாப்சிகல் என்பது நம்ம ஊர் குச்சி ஐஸ் தவிர வேறில்லை. பேசில் விதைகள் என்பதும் துளசி விதைகள் தவிர வேறில்லை. எனவே யார் வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் விருப்பப்படி வெவ்வேறு பழங்களைப் பயன்படுத்தி குச்சி ஐஸ் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் குழந்தைகளுக்கு இது போல குளிர்ச்சியாக எதை சாப்பிடக் கொடுத்தாலும் உடனே சிறிது வெந்நீர் அருந்தச் செய்து விட்டால் சளி பிடிக்காமல் தவிர்க்கலாம்.