தமிழக மக்களின் நெஞ்சம் நிறைத்துச் சென்ற ‘அம்மா'!
ஏறக்குறைய கடந்த ஞாயிறு இரவு முதலே பொதுமக்கள் ஏதோ ஒரு வகையில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த துக்கச் செய்தி தான். திடீரென்று அறிவிக்கப்பட்டிருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் தண்டனை கிடைத்த அன்றைப் போலவே நிறைய அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கக் கூடும்.
ஆனால் மிதமான பரபரப்பு இருந்ததே தவிர பெரும்பாலும் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் தான் ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. சாலைகள் வெறிச்சோடி இருக்கின்றன, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது, அரசு 7 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கிறது, தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் துக்கத்தில் தோய்ந்து கனத்த அமைதி காக்கிறது.
இதை தங்களது முன்னாள் முதல்வரின் மரணத்துக்கு தமிழக மக்கள் செலுத்தும் கெளரவமிக்க மரியாதையாக எண்ணிக் கொள்ளலாம். அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மிகப்பெரிய வெற்றிகளைச் சாத்தியப் படுத்தியதும் ‘இந்த சாமானிய மக்களுக்கு ஆதரவான ஆட்சி’ எனும் இமேஜ் தான். அதை தனது மரணத்தின் பின்னும் நிரூபித்துச் சென்றிருக்கிறார் என்றென்றும் தமிழக மக்களின் நெஞ்சம் நிறைத்துச் சென்ற ‘அம்மா’.