சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி தோட்டக்கலை அறிவியல் பயிலும் நந்தினி(18) எனும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது பயிற்றுமொழியான ஆங்கிலம் புரியாத காரணத்தால், தேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
நந்தினி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர். பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்ததால், கல்லூரி முதல் வருடத்தில் பயிற்று மொழியான ஆங்கிலம் அவருக்குப் பெரும் மனக்கவலை அளிப்பதாக இருந்திருக்கிறது. ஆங்கிலத்தின் மீதான தனது பயத்தை சக தோழிகளிடமும் நந்தினி பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார். சம்பவத்தன்று அவரது அறைத் தோழி விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்று விட நந்தினி மட்டும் தனியாகத் தனது ஹாஸ்டல் அறையில் இருந்திருக்கிறார். திங்களன்று இரவு உணவு நேரத்தில் நந்தினியைக் கடைசியாகக் கண்டதாகவும், அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லை எனவும் அவரது சக ஹாஸ்டல்வாசிகள் தெரிவித்தனர். வரப்போகும் செமஸ்டர் தேர்வுகளை உத்தேசித்து முன்னரே பயத்தில் இருந்த நந்தினி அறைத் தோழியும் உடனில்லாத நிலையில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
உடனிருக்கும் வகுப்புத் தோழிகள் ஆங்கில வழியில் பாடங்களை கற்க அவ்வப்போது நந்தினிக்கு உதவி வந்த போதும், தனது ஆங்கில அறிவு குறித்த நந்தினியின் தாழ்வு மனப்பான்மை அவரது உயிரைக் குடித்திருக்கிறது.
முதலில் தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நந்தினி பின்னர் தனது சுரிதார் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என ஃபாரன்ஸிக் முடிவுகள் தெரிவிக்கின்றன.