‘நாஃப்கின் மனிதர்’ எனப் பொருள்படும் 'Pad Man'  திரைப்படத்தில் அமிதாப் நடிக்கிறார்!

தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படவிருக்கும் இத்திரைப்படத்தில் பாலிவுட் பிக் பி அமிதாப் நடிக்கவிருக்கிறார்
‘நாஃப்கின் மனிதர்’ எனப் பொருள்படும் 'Pad Man'  திரைப்படத்தில் அமிதாப் நடிக்கிறார்!

மோடியின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் வருகிறது கிராமப்புற மகளிர் மாத விடாய் காலங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள். பெரு நிறுவனங்கள் தயாரித்து சந்தைகளில் விற்பனையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பிரபல நாஃப்கின்கள் அனைத்தும் நான்கிலக்க சம்பளக்காரர்களுக்கே கட்டுப்படியாகுமோ, ஆகாதோ?! எனும் நிலையில் கிராமப்புற உழைக்கும் மகளிர் மாத விடாய் காலங்களில் என்ன செய்வார்கள்? அவர்களும் சுகாதாரமான நாஃப்கின்களைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் அவற்றின் விலை ஏழைகளின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கொடுமையான வதையாக இல்லாமல் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தவர் தான் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்.

ஏழைப் பெண்களுக்கு தரமான மலிவு விலை நாஃப்கின் தயாரிக்கும் முயற்சியில் ஒரு கட்டத்தில் முருகானந்தம் தனது மொத்தக் குடும்பத்தினரின் வெறுப்பையும் சம்பாதித்தார். ஊர் இவரை பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடியது. சொந்த மனைவிக்கே தன் கணவரைக் கண்டால் மனநலம் சரி இல்லாதவரோ என்ற சந்தேகம் வரும் நிலை. இந்த தொடர் போராட்டங்களைக் கடந்து தான் முருகானந்தம் தனது இலக்கான மலிவு நிலை நாஃப்கினை கண்டறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது வாழ்க்கை தான் பாலிவுட்டில் அடுத்த மோஸ்ட் வாண்டட் பயோ பிக் 'Pad man'. தமிழ்ப்படுத்தினால் ‘நாஃப்கின் மனிதர்’ என்று பொருள். இதை இயக்கப் போவது இயக்குனர் பால்கி. முருகானந்தமாக நடிக்கவிருப்பது ரஜினியின் 2.0 வில்லன் அக்‌ஷய் குமார். இசை மேஸ்ட்ரோ இளையராஜாவாக இருக்கலாம். முருகானந்தத்தின் மனைவி சாந்தியாக நடிக்கவிருப்பது ‘கபாலியின் மாய நதியான’  நடிகை ராதிகா ஆப்தே!

இது முன்னரே நாளிதழ்களில் வெளிவந்த செய்தி தான். ஆனால் இதில் புதுசு என்ன தெரியுமா? தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படவிருக்கும் இத்திரைப்படத்தில் பாலிவுட் பிக் பி அமிதாப் நடிக்கவிருக்கிறார் என்பது தான். ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் அமிதாப் ஓரிரு காட்சிகளில் ஒரிஜினல் அமிதாப்பாகவே நடித்திருப்பார். படத்தில் அவர் வரும் காட்சி ஸ்ரீதேவி கதாபாத்திரத்தின் தாழ்வு மனப்பான்மையை அகற்றும் மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும். அதே போன்றதொரு காட்சி PadMan திரைப்படத்திலும் உண்டாம். எனவே மீண்டுமொருமுறை தன் ஆதர்ஷ இயக்குநர் பால்கிக்காக அமிதாப் பிக் பியாகவே அதாவது அமிதாப்பாகவே தோன்றி நடிக்க இருப்பதாக அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Image courtsy: DAILY HUNT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com