நம்புவீர்களா தக்காளி ஒரு காலத்தில் அலங்காரச் செடியாமே!?

தக்காளி இயல்பில் பழமாக இருந்தாலும் கூட அமெரிக்க உயர்நீதி மன்றம் 1893 இல்  தக்காளியை காய்கறி வகைகளில் சேர்க்க ஆணையிட்டது, வணிகக் காரணங்களுக்காக  இந்த ஆணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நம்புவீர்களா தக்காளி ஒரு காலத்தில் அலங்காரச் செடியாமே!?

இப்போதெல்லாம் இல்லத்தரசிகளுக்கு சமையலறையில் தக்காளி இல்லாவிட்டால்  ஒரு கை உடைந்தார் போல பெரும்  சிக்கலாகி விடும் அவர்களின் கிச்சன் மேலாண்மை தக்காளியற்றுப் போன ஒரே நாளில் நிலை குலைந்து போய் விடக் கூடும். 

தக்காளி இன்றைக்கு சமையலறையின் ராணி .தக்காளிச் சாதம் என்று மட்டுமே இல்லாமல் நாளொன்றுக்கு சாம்பார்,ரசம்,சட்னி வகைகள்,சப்பாத்திகளுக்கான கிரேவி வகைகள்,குருமா வகைகள்,சாஸ்கள்,கெட்ச்- அப்கள் நூடுல்ஸ்களுக்கான டேஸ்ட் மேக்கர்கள் , தக்காளி ஃப்ளேவர் இட்ட சிப்ஸ் வகைகள் இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் தக்காளியை  சாப்பிட்டுக் கொண்டே தான் இருக்கிறோம் .போதாக்குறைக்கு தக்காளி ஃப்ளேவரில் சிப்ஸ்கள் வந்த பிறகு குழந்தைகளின் மனம் கவர்ந்த ஸ்நாக்ஸ் அதுதான் என்றாகி விட்டது.தக்காளியின் மிதமான இனிப்பும் புளிப்புமான சுவை குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமானது. குழந்தைகளின் இளம் நாவின்  சுவை மொட்டுகளை தக்காளியின் மிதமான புளிப்புச் சுவை உண்ணத் தூண்டுகிறது என்பதால் சிப்ஸ்களின் விற்பனை மார்கெட் உச்சத்தை தொடுகிறது.

இன்றைக்குத் தக்காளி இல்லாமல் ஒருநாளைக் கடத்தி விட முடியாது என்பதோடு மாதக் கடைசி நாட்களில் இல்லத்தரசிகளின் இனிய தோழி என்றும் தக்காளி கருதப் படுகிறது. காய்கறி விலைகள் வானை எட்டும் அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கையில் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட வெறுமே தக்காளியையும் வெங்காயத்தையும் இரண்டொரு மிளகாயையும் நறுக்கிப் போட்டு மிளகாய் கிள்ளி சாம்பார் என்ற பெயரில் வெறும் சாம்பார் வைத்து இட்லி,அரிசி சதம்,வெண் பொங்கல் எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சமையலறையில் அத்தனை எல்மையானதாகவும் அவசியமானதாகவும் திகழ்கிறது தக்காளி.

இப்படி வீடு மட்டுமல்லாமல் ஹோட்டல்கள்,ரெஸ்டாரெண்டுகள் ,பள்ளி கேன்டீன்கள் என்று எல்லாவிடங்களிலும் தக்காளி மணத்துக் கொண்டிருக்கையில்  பராக்கிரமம் மிக்க இந்த தக்காளியானது ஒரு காலத்தில் இங்கிலாந்தில் வெறுமே குரோட்டன்ஸ் போல அலங்காரச் செடியாக மட்டுமே வளர்க்கப் பட்டது என்றால் நம்புவீர்களா?! தக்காளியே இல்லாத சமையல் நடந்திருகிறது ஒரு காலத்தில் என்று சொன்னால் நம்புவீர்களா?!

யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது நிஜமான தகவல் தான் !

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து வழியாக இந்தியாவிற்கு வந்த இந்த தக்காளியைப் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் எந்தக் குறிப்புகளும் இல்லை ,அப்படியெனில் தக்காளி இந்தியக் காய்கறி அல்ல என்பது உறுதியாகிறது. மகளின் புழக்கத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவற்றைப் பற்றி ஏதேனும் புறநாநூற்றுப்  பாடல்கள் புனையப் பட்டிருக்கப்  கூடும். அப்படி பாடல்கள் இல்லை எனும் போது தக்காளி சங்ககாலத்தில் தமிழ்நாட்டில்  பயன்பாட்டில் இல்லை என்பது புலனாகிறது. தக்காளி மெக்சிகோ வில் இருந்து கடல் வழியாக ஆங்கிலயேர் மூலம் இந்தியாவிற்கு வந்த காய்கறியே என்பதை இப்போது நாம் நம்பலாம் தானே! அப்படி தக்காளியை நமக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் தான் ஆரம்பத்தில் தக்காளி சார்ந்திருக்கும் தாவரக் குடும்பத்தின் குணங்களைக்  கண்டு அலறி அவற்றை வெறுமே அலங்காரச் செடியாக மட்டுமே பயன்படுத்தி வந்தார்களாம்.

ஏனெனில் தக்காளி சார்ந்திருக்கும் தாவரவியல் குடும்பத்தில் மற்ற செடிகள் எல்லாம் விசத் தன்மை வாய்ந்த மூலக்கொருகளைக் கொண்டவை என்பதால் தக்காளியை பலகாலங்களாக உண்ணக் கூடிய பொருட்கள் லிஸ்ட்டில் ஆங்கிலேயர்கள் சேர்க்கவே இல்லை. அந்தக் காலங்களில் அங்கெலாம் வெறும் அலங்காரச் செடியாக மட்டுமே தக்காளி மதிக்கப் பட்டுள்ளது .குரோட்டஸ் செடிகளை அவற்றின் இலைகளின் மாறுபட்ட ஈர்க்கும் நிறக் கலவைக்காக தோட்டங்களின் முன் பகுதிகளில் வைத்து அழகு பார்க்கிறோமே அப்படித் தான் அன்றைக்கு தக்காளியும் இருந்து வந்தது.

முன்பே ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்காரர்கள் தக்காளியை விசமில்லை என்று நிரூபித்து உணவில் சேர்த்துக் கொண்ட போதும் கூட ஆங்கிலேயர்கள் அமெரிக்கர்கள் தக்காளியை உணவுப் பொருளாக மதிக்கத் தொடங்கிய பின்பு தான் தக்காளியை உணவில் சேர்க்க ஆரம்பித்தார்களாம்.

தக்காளி இயல்பில் பழமாக இருந்தாலும் கூட அமெரிக்க உயர்நீதி மன்றம் 1893 இல்  தக்காளியை காய்கறி வகைகளில் சேர்க்க ஆணையிட்டது, வணிகக் காரணங்களுக்காக  இந்த ஆணை ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றளவிலும் தக்காளி காய்கறி லிஸ்ட்டில் இருந்தாலும் தாவரவியல் படி தக்காளி பழ வகை தான். மோகத்தை, காதலை தூண்டும் சக்தி தக்காளிக்கு இருப்பதால் இதை "லவ் ஆப்பிள் " என்றும் அழைக்கிறார்கள்.தக்காளியின் சிவப்பு நிறத்தினால் அதற்கு இப்படியொரு இயல்பு தன்னிச்சையாக வழங்கப் பட்டிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com