உயிர்வேலிகளை உருக்குலைத்து கம்பிவேலிகளை உருவாக்கி பயிர்களுக்கு உலை வைத்தவர்கள் அறிவார்களா இதை?!

ஏலியன்கள் பூமியை அழிப்பது போல் வெறி கொண்டு இந்த உலகத்தை அழித்து விட்டோம். விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், ஃப்ளாட்டுக்களாகவும் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன.
உயிர்வேலிகளை உருக்குலைத்து கம்பிவேலிகளை உருவாக்கி பயிர்களுக்கு உலை வைத்தவர்கள் அறிவார்களா இதை?!

நண்பர் ஒரு முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்த செய்தி, தற்கால விவசாயப் பிரச்னைகளுடனும், மக்களது வாழ்வியலுடனும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்ததால் தினமணி வாசகர்களும் அறிந்து கொள்ளுங்கள்.

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில். ஒரு பெண்மணி கேட்டார்.

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று?

முன்னொரு காலத்தில், அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டுச் சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன். கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்சக் கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும். இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும். இவற்றை உணவாக கொள்ள வண்டுகள், நண்டுகள், பாப்பிராண்டிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள், ஆமைகள், இப்படிப் பல உயிர்களும் இவற்றை உணவாக கொள்ள பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.

மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும், மூலிகைகளும் கிடைத்தன. இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில் 

‘ஓணானைக் கண்டால் ஓட ஓட விரட்டு
பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு’

- என்று ஓணான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கக் கூடும்.

இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.

பாம்புகளும், ஆந்தைகளும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.

பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.

"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின."

ஆனால் இன்று?!

ஏலியன்கள் பூமியை அழிப்பது போல் வெறி கொண்டு இந்த உலகத்தை அழித்து விட்டோம். விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், ஃப்ளாட்டுக்களாகவும் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள், தார்ச் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன. கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு... உயிர்வேலிகளனைத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்து காக்காக்குருவி கூட கூடு கட்ட முடியாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.

இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.

அதில் முக்கியமானது குள்ளநரிகள். இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.

இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.

விளைவு?

மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.

"நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்."

கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.

மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.

இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.

என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சிறு வயதிலேனும் கிராமத்து வாழ்வியலுக்குப் பழகியவர்களுக்குத் தெரியக்கூடும் இந்த நிஜங்கள்.

கிராமங்களில் கூட உயிர்வேலி என்றொரு அம்சமே இன்று இல்லை என்பது நிஜம் தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com