பொதுவாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் சருமத்தை மென்மையாக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் வறண்ட சருமம், சருமத்தில் உலர்வான தன்மை, மற்றும் காயங்கள் என்று எந்த பிரச்னைக்கும் உடனடி நிவாரணி தேங்காய் எண்ணெய் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள்.
ஸ்வாதி கபூர் - கூட்டு நிறுவனர், சோல்ட்ரீ, ராகினி மெஹ்ரா - நிறுவனர், பியூட்டி சோர்ஸ், மற்றும் ஆக்ரிதி கோச்சர் - அழகு / ஒப்பனைக் கலை நிபுணர், ஓரிஃப்ளேம் இந்தியா ஆகியோர் தேங்காய் எண்ணையை சரும அழகுக்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.
தேங்காய் எண்ணெயை மேக் அப் ரிமூவராகப் பயன்படுத்தலாம். காரணம் அது வாட்டர்ப்ரூஃப் மேக் அப்புக்களைக் கூட மென்மையாகவும் துல்லியமாகவும் அகற்றிவிடும்.
தேங்காய் எண்ணெயை உடலில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளலாம். அது உடலை நன்றாக தளர்வாக்குவதுடன் புத்துணர்ச்சி அளிக்கும். உடலில் உள்ள வறட்சித்தன்மை நீங்கி சருமம் பளபளப்பாகிவிடும்.
சந்தையில் கிடைக்கும் மாயிஸ்சரைஸர்களில் பெரும்பாலானவை நீர் அல்லது பெட்ரோல் பொருட்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டவை. தேங்காய் எண்ணெய் முற்றிலும் இயற்கையான ஒரு மாயிஸ்சரைஸர். சருமத்துக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சருமத்தில் உள்ள சிறு சிறு பிரச்னைகளை சீராக்கி, அதை நன்கு பராமரிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
தேங்காய் எண்ணெயை கண் பகுதியைச் சுற்றிலும் தேய்த்து வர கருவளையம் ஏற்படாமல் காத்து, சுருக்கங்களையும் தடுக்கிறது.
தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து, முகத்தில் அடர்த்தியாகத் தடவவும். இது முகப்பருவை நீக்கவும், சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற உதவுகிறது.
தேங்காய் எண்ணெயுடன் பனங்கற்கண்டைக் கலந்து முகத்தில் தடவவும். இது சருமத்தில் உள்ள அழுக்குகளைக் களைந்து சருமத்தைப் பொலிவடையச் செய்யும். பனங்கற்கண்டு இறந்த சருமத்தை நீக்க, தேங்காய் எண்ணெய் முகத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுத்து மென்மையாக்கும்.
பபுள் பாத் மற்றும் பாத் சால்ட்டுக்களுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். சூடான தண்ணீர் எண்ணெயை உருக்கும், தண்ணீரும் எண்ணெயுமாகச் சேர்ந்து சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைத்துவிடும்.
சிறிய வெட்டுக் காயங்கள், சிராய்ப்புகள், மற்றும் புண்களின் மீது தேங்காய் எண்ணெயைத் தடவினால் அக்காயங்கள் விரைவில் ஆறும். தேங்காய் எண்ணெய் அழுக்கு மற்றும் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு அந்தப் பகுதிகளைப் பாதுகாக்கிறது.