ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு, நீண்ட இடைவெளியான 17 ஆண்டுகள் கழித்து உலக அழகியாக இந்தியாவிலிருந்து தேர்வானார் மனுஷி சில்லர். அவ்வகையில் இந்தியாவுக்கு மீண்டும் அழகு மகுடம் சூட்டிப் பெருமை சேர்த்தவர் இவர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலகம் முழுவதுமான மீடியாவின் உடனடி கவனத்தைப் பெற்றார். பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க சில வாய்ப்புக்கள் வந்தபோது அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் மனுஷி. அடிப்படையில் மருத்துவ மாணவியான அவர் பல்வேறு மனிதநேய செயல்களை செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அக்கறை காட்டிவருகிறார் இந்த சர்வதேச அழகி.
இந்நிலையில் உலக அழகி பட்டம் வென்ற பிறகு முதமுறையாக மலபார் கோல்டு அண்ட் டைமன்ஸ் ஜூவல்லரியின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் மலபார் கோல்டு சார்பாக உலக அளவில் விளம்பரம் தொடர்பாளராகவும், தொண்டு செய்யும் பணிகளிலும் பங்கு பெறுவார் மனுஷி. மேலும் அந்த நிறுவனத்தின் விளம்பரங்களிலும் தோன்றவுள்ளார். இதுகுறித்து மனுஷி சில்லர் தெரிவித்ததாவது,
'நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். நம் நாட்டில் அனைத்து விழாக்களையும் மிகவும் கோலாகலமாகவும், பண்பாட்டுடனும், உணர்வுபூர்வமாக கொண்டாடும் விதம்தான் என்னை உலக அழகி பட்டம் வரை கொண்டு சென்றது. மலபார் கோல்டுடன் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
இதுநாள் வரை திரைப்படங்கள், விளம்பரப்படம் என எதிலும் நடிக்காத மனுஷி, தற்போது மலபார் கோல்டு விளம்பரத் தூதரானதன் மூலம் முதன்முறையாக விளம்பரம், பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.