நாடு முழுவதும் ஸ்மார்ட்ஃபோன்களில் இணையத்தின் வசதி அதிகரிக்க காரணமாக ஜியோ நெட்வொர்க்கின் திட்டங்கள் அமைந்துவிட்டன என்றால் மிகையல்ல.
கடந்த 2016-ஆம் ஆண்டு வரை ஸ்மார்ட்ஃபோன்களில் இணையத்தின் தேவை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன. இதனால் தேவைக்கு ஏற்ப மட்டுமே அதன் பயன்பாடுகளும் அமைந்தன. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது இன்டர்நெட் பேக்குகளின் கட்டணம் தான்.
முன்பெல்லாம் ஒரு ஜிபி இன்டர்நெட் பேக் ரூ.500 மற்றும் அதன் வேலிடிட்டி ஒரு மாதம் வரை இருந்தன. இத்தனைக்கும் அவை 3ஜி அலைவரிசை மட்டுமே. அதுவே 2ஜி என்றால் அதன் கட்டணம் சற்று குறைவாக காணப்பட்டது.
இதனை தகர்க்கும் விதமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. துவக்கத்தில் இலவச சிம் கார்டுகள் மட்டுமல்லாமல் அதன் சேவைகளும் ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டன. அதில் ஒரு நாளைக்கு அன்லிமிடட் வேலிடிட்டியுடன் கூடிய இணைய சேவை, அளவில்லா அழைப்பு மற்றும் மெசேஜ் என்பன போன்ற வசதிகள் 4ஜி அலைவரிசையில் கிடைத்தன.
எனவே அதிகளவிலான மக்கள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மாறத் தொடங்கினர். பின்னர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும் அவையும் குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றன. எனவே ஜியோ சேவை மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது 'ஜியோ பானிபூரி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் நினைப்பது போன்று இதுவும் ரிலையன்ஸ் நிறுவனத்துடையது இல்லை. மாறாக கர்நாடகத்தில் உள்ள பானிபூரி வியாபாரிதான் இந்த பலே திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.80, ஒரு நாளைக்கு ரூ.200 மற்றும் ஒரு மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி அளவில்லா பானிபூரி உண்ணலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளார்.
பெரிய வணிக நிறுவனங்கள் பல வகைகளில் பயன்படுத்தி வரும் விளம்பர யுத்திகளுக்கு மத்தியில் இந்த பானிபூரி வியாபாரியின் பலே திட்டம் சமூக வலைதளங்களில் வைராகப் பரவி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.