கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தானாப்பூர் என்கிற கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இந்த பெண்ணின் வீட்டில் கழிப்பறை இல்லை. அம்மா, 'பணம் இல்லை' என்று மறுத்து விடுகிறார். 'நீ கழிப்பறை கட்டித் தரும் வரை நான் சாப்பிட மாட்டேன்' என்று உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டாள் மல்லம்மா.
இந்த செய்தி கிராம பஞ்சாயத்து தலைவரை எட்டுகிறது. அவர் மல்லம்மாவுக்கு உதவ முன் வருகிறார். இந்த செய்தி பிரதமர் மோடிக்கும் சென்றது. அவர் அந்த பெண்ணையும், பஞ்சாயத்து தலைவரையும் பாராட்டி பேசினார். மல்லம்மா வீட்டில் கழிப்பறை வசதி வந்து விட்டது! அவருடைய உண்ணாவிரதமும் முடிவடைந்தது!
சுக்ரி என்ற பெண்மணி கர்நாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் நாட்டுப் பாடல்கள் பாடுவதில் பிரபலமானவர். பத்மஸ்ரீ - விருது பெற்றவர். இவருடைய நினைவில் 5000 நாட்டுப் பாடல்கள் இப்போதும் இருக்கின்றனவாம். இவரது பாடல்கள் கொண்ட ஒரு புத்தகத்தை கர்நாடக ஜனவாத அகாதெமி வெளியிட்டிருக்கிறது. கார்வார் வானொலி நிலையம் இவரது இனிமையான குரலில் பாடிய பாடல்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
இவரைப் பற்றிய இன்னொரு தகவல் தனது கணவர் குடிப்பழக்கத்தால் இறந்து விடவே பல போராட்டங்களை நடத்தி, கிராமத்தில் சாராய கடைகளை மூட வைத்தார். இந்த 80 வயதிலும் வயல்களில் வேலை செய்கிறார்.