கடந்த சனிக்கிழமையன்று இரவு துபையில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் திரையுலகைப் பொருத்தவரை அதன் வரலாற்றில் நடிகை ஸ்ரீதேவி தவிர்க்க முடியாத ஒரு நபர். குழந்தை நட்சத்திரமாகத் தமிழில் அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நடித்து பிறகு இந்திக்குச் சென்று சூப்பர் ஸ்டாராக அங்கேயே கணவர், குழந்தைகள் என செட்டிலான ஸ்ரீதேவிக்கு இன்று வரை தனித்த ரசிகர் பட்டாளங்கள் உண்டு. மும்பையில் அவர் எங்கு சென்றாலும் எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஸ்ரீ மேம்... ஸ்ரீ மேம் ப்ளீஸ் ஒரே ஒரு போஸ் என அவரைச் சூழ்ந்து கொண்டு புகைப்படங்களாகச் சுட்டுத் தள்ள ஆளாய்ப் பறக்கும் செய்தியாளர்கள் பலருண்டு.
குழந்தைப் பருவம் முதல் தனது திருமணத்துக்கு முன்பு வரை பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி போனி கபூருடனான திருமணத்தின் பின் சுமார் 5 வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்பு 'இங்லீஷ் விங்லீஷ்' திரைப்படம் மூலமாக மறுபிரவேஷம் செய்தார். அத்திரைப்படம் அவருக்கு நற்பெயரைப்பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் கடந்த வாரம் துபையில் கணவர் போனி கபூர் வகையில் உறவினரான மோஹித் மார்வா திருமணக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தவர் பரிதாபத்துக்குரிய வகையில் சுயநினைவின்றி குளியலறைத் தொட்டியில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் பரவின.
முதலில் இதயம் செயலிழப்பு என்று காரணம் கூறப்பட்டது. பின்பு குளியலறைத் தொட்டியில் இருந்து எழ முடியாமல் மூச்சுத் திணறியதால் மரணம் என்றார்கள். ரசிகர்களுக்கு இப்போது வரை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் மர்மமாகத்தான் இருக்கிறது.
வானில் தக தகவென மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரம் ஒன்று சடாரென உதிர்ந்தால் எப்படி இருக்கும்?! அப்படித்தான் இருக்கிறது ஸ்ரீதேவியின் மரணம்.
அடிப்படையில் அவர் தமிழகத்துப் பெண். தமிழில் நடித்து தனது திறமையை நிரூபித்து விட்டு பிறகு தான் அவர் பிற மொழிகளுக்குச் சென்றார்.
எந்தவித செயற்கைப் பூச்சுகளும் அற்ற, ஒப்பனை குறைவான போதும் அழகின் திருவுருவாக ஜொலித்த அப்பழுக்கற்ற குழந்தைத் தனம் மாறாத ஸ்ரீதேவியை முதல்முறை நாயகியாகக் கண்டு ரசிக்கும் பேறு பெற்றவர்கள் தமிழ் ரசிகர்களான நாம் தான்.
யோசித்துப் பாருங்கள்...
மீண்டும் கோகிலா, டிக்...டிக்...டிக், போக்கிரி ராஜா, நான் அடிமை இல்லை, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், காலத்து ஸ்ரீதேவியை ஒருமுறை நினைவிலோட்டிப் பாருங்கள்...
நிச்சயம் அந்தக் கால நினைவுகளில் சிக்கி கலங்கிப் போவீர்கள்1
எப்பேர்ப்பட்ட நடிகை அவர்?!
இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவிருக்கிறது.
நாம் கண்டு ரசித்த இந்திய சினிமாக்களின் செல்லத் தாரகை.
அவர் மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் இருக்கின்றன என்றென்றைக்குமாய்!
தினமணி இணையதள வாசகர்கள் ஸ்ரீதேவி குறித்த தங்களது நினைவலைகளைப் பதிவு செய்ய #missyousridevi ஹேஷ் டேக் உதவும்.
ஸ்ரீதேவி குறித்த பொக்கிஷ நினைவுகளைப் பதிவு செய்யுங்கள்!
ஸ்ரீதேவி உடலுக்குப் பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி! (படங்கள்)
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி
ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை என்று கருதுகிறேன்: சுப்ரமணியன் சுவாமி கிளப்பும் பூதம்!
ஸ்ரீதேவி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாரா?: கேள்விகளை எழுப்பும் பிரபல இயக்குநர்!
என்னுடைய இரண்டாவது தாயை இழந்தேன்! ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ திரைப்பட மகள் கண்ணீர்!