திரைப்படங்களில் உதிரி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த எம்ஜிஆரை தான் வசனமெழுதும் திரைப்படங்களில் நாயகனாக நடிக்க சிபாரிசு செய்து கொண்டிருந்தார் கலைஞர். அப்படித்தான் ‘மந்திரி குமாரி’ திரைப்பட வாய்ப்பு எம்ஜிஆருக்கு கிடைத்தது. ஆனால், தன் திரைப்படத்தில் எம்ஜிஆரை நடிக்க வைக்க அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு விருப்பமில்லை. அவர் தனது மறுப்பைத் தெரிவிக்கும் நோக்கில்,
‘அட என்னய்யா, இந்த ஆளுக்கு முகவெட்டே சரியாயில்லை. மோவாயில் இருக்கும் பள்ளம் வேறு அசிங்கமாக இருக்கிறது. இவரா என் படத்துக்கு ஹீரோ? வேண்டாம்யா வேற ஆளை மாத்து’
- என்று சீரியஸாகவே அத்திரைப்படத்தின் கதை வசனகர்த்தாவான கலைஞரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கலைஞர் சொன்ன பதில், ‘அட மோவாய்ல இருக்கற குழி தான் உங்களுக்குப் பிரச்னைன்னா, அங்க ஒரு தாடிய ஒட்டுங்க’ என்று சொல்லி தன் நண்பரை விட்டுக் கொடுக்காமல் ஆரம்ப காலங்களில் இருவரும் இணைந்தே திரைத்துறையில் ஜொலிக்க வழி செய்து கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆர், கலைஞரின் ஆரம்ப கால நட்பில் இப்படி சுவாரஸ்யமான ஆச்சார்யங்கள் ஏராளம் உண்டு...
சந்தேகமிருந்தால்... இப்போது கூட மந்திரி குமாரி திரைப்படத்தைப் பார்த்தீர்களெனில் அதில் எம்ஜிஆர் தனது மோவாய்க்குழியில் ஒட்யிருக்கும் சிறு தாடியொன்றைக் காணும் பேறு பெற்றவர்களாவீர்கள்.