ஆக்ஷன் த்ரில்லரான பூமராங் எனும் படத்தில் அதர்வா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் சமூக சீர்கேடுகளை எதிர்த்து போரிடும் ஒரு சமூக ஆர்வலாக நடிக்கிறார். இந்தப் படத்தில் மூன்று விதமான கெட்டப்புக்களில் அவர் நடித்துக் கொண்டிருப்பதால், தினமும் வெவ்வேறு மேக் ஓவர்கள் அவருக்குப் போடப்படுகிறது. இது குறித்து பூமராங் படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியது, ‘இந்தப் படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தை எழுதும் போதே இதில் மூன்று விதமான தோற்றங்களில் அவர் வருவதாகத் தான் உருவாக்கியிருந்தேன்.
என் திரைக்கதையில் உருவாக்கியுள்ள அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்க மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்தோம். பிரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிசெளஸா ஆகிய இருவருமே இந்தத் துறையில் மிகவும் திறமைசாலிகள். சிறந்த மேக் அப்புக்காக விருது வாங்கியவர்கள்.
முதலில் மும்பைக்குச் சென்று தான் அதர்வாவின் prosthetic make over விஷயங்களைப் பற்றி விரிவாக பேச முடிவு செய்திருந்தோம். (புரோஸ்தெடிக் ஒப்பனை என்றால் ஒருவரின் முகத்தில் சுருக்கமோ அல்ல வயதை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலும் அடையாளத்தை மாற்றிவிடக் கூடிய மேக் அப் ஆகும்). தொடர்ந்து படப்பிடிப்பு இருந்து கொண்டிருந்தால், எங்களால் மும்பை செல்ல முடியவில்லை, இருவரையும் சென்னைக்கே வரவழைத்தோம்.
இருவரும் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்து ஒவ்வொருமுறை மேக் அப் போடும்போதும், அதர்வாவுடன் கிட்டத்தட்ட 12 மணி நேரம் செலவழித்தனர். அதர்வாவின் மேக் அப் மிகவும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் ஐந்து மணி நேரம் ஆடாமல் அசையாமல் அவரை உட்கார வைத்து களிமண் போன்ற ஒன்றை கண்கள் மூக்குத் தவிர முகம் முழுவதும் பூசினார்கள். இந்த நிலையில் அவர் மூச்சு விட சிரமப்படக் கூடாது என்று சிறிய ட்யூப் ஒன்று அவரது மூக்கில் பொருத்தப்பட்டது’ என்றார் கண்ணன்.
இதுபோன்ற மேக் ஓவரை முதன் முதலாக போட்டுக் கொள்ளும் அனுபவத்தைப் பற்றி அதர்வா குறிப்பிடுகையில், ‘ரொம்ப நேரம் இந்த மேக் அப் போட்டுட்டே இருப்பாங்க சில சமயம் என் முகத்துல என்ன நடக்குதுன்னே தெரியாது. ஆனால் இது ரொம்ப வித்யாசமான அனுபவம். முதல் முறையா இந்த மேக் அப் போடறதுல சந்தோஷம்தான்’ என்றார்.
இமைக்கா நொட்டிகள், மற்றும் செம்ம போத ஆகாத போன்ற படங்களில் நடித்து வரும் அதர்வா, அடுத்து ‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் இயக்குநர் ஸ்ரீகணேஷின் படத்தில் நடிக்கவிருக்கிறார்.