கட்டிப் பெருங்காயம் இறுகிப் போகாமல் நீண்ட நாள் இருக்க, பெருங்காயம் வைத்திருக்கும் டப்பாவில் ஒரு பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளிப் போட்டு வைத்தால் பெருங்காயத்தை எளிதில் கிள்ளி எடுக்கவரும். இறுகியும் போகாது.
**
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் லவங்கப்பட்டை மருத்துவ குணம் நிறைந்தது. சளி இருமல் உடல் பருமன் சர்க்கரை நோய் பல் வலி மூட்டுவலி தசைவலி ரத்த அழுத்தம் புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் ஞாபகத்திறன் அதிகரிக்கவும் பயனளிக்கக் கூடியது. அதனால் இதனை சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
**
பூரி பஜ்ஜி போண்டாவிற்கு மாவு கலக்கும் போது சிறிது தரமான ஓம வாட்டர் கலந்து பின் தேவையான தண்ணீரும் சேர்த்துக் கலந்து செய்தால் அஜீரணத் தொல்லைகளை மட்டுப்படுத்தலாம். அடை தோசை மாவிலும் சிறிது ஓமவாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.
**
கொட்டை இல்லாத புளி என்றால் கை போட்டு கூட கரைக்க தேவையில்லை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மிக்சியில் இரண்டு சுற்று சுற்றி வடிகட்டினால் புளி கரைசல் தயார்.
**
ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும். உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றாலும் உடனே எளிதாகச் செய்துவிடலாம்.
- எஸ். சரோஜா