அப்புசாமி மறைந்து விட்டாரா?! ரசகுண்டாகக் கனக்கிறது மனம்!

அப்புசாமி மாதிரியான அப்பாவி தாத்தா கதாபாத்திரமும், சீதாபாட்டி மாதிரியான கட்டுப்பாடான மெஜஸ்டிக் பாட்டி கதாபாத்திரத்தையும் பாக்கியம் ராமசாமியைத் தவிர அவருக்கு முன்னேயும் சரி பின்னேயும் சரி எவரும் படைத்த
அப்புசாமி மறைந்து விட்டாரா?! ரசகுண்டாகக் கனக்கிறது மனம்!

இரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் நடுவில் விழிப்பு வந்தால் சிறுவர்கள் கோயிலில் காண்டாமணியைக் கண்டால் தங்களை அறியாமல் ஓடிப்போய் ஒருமுறை அடித்துப் பார்க்காமல் ஓய மாட்டார்களே அதே எஃபெக்டில் அனிச்சையாக அலைபேசியை உயிர்பித்து ஃபேஸ்புக்கை ஆராயும் வழக்கம் கொண்ட கோடானு கோடி ஜீவன்களில் அடியவளும் ஒருத்தி. அப்படித்தான் நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கை இரவு 12 மணியளவில் ஒருமுறை எட்டிப் பார்க்கையில் ஜ.ரா.சு அலைஸ் பாக்கியம் ராமசாமி மறைந்தார் என்ற செய்தியைக் காண நேர்ந்தது. ஒருகணம் மெல்லிய சஞ்சலத்துடன் மனம் திடுக்கிட்டு மீண்டது. வாழ்ந்தவர் எல்லாம் மாண்டவராவது நியதியே! ஆயினும் சிலரால் மட்டுமே இறப்பின் பின்னும் அழியாப்புகழுடன் ஜீவித்திருக்க முடியும். அப்படிப்பட்டவர்களில் ஜ.ரா.சுவும் ஒருவர். 

ஜ.ரா.சு வை பாக்கியம் ராமசாமியாகத்தான் முதலில் அறிந்தேன். பள்ளிக்காலங்களில் எனது கிராமத்தில் ஒரு சிறு கிளை நூலகம் இருந்தது. அதில், அப்போது நான் தேடித் தேடி வாசித்தது இருவரை. அதிலொருவர் வாண்டுமாமா, அடுத்தவர் பாக்கியம் ராமசாமி. அன்று அவரது அப்புசாமி, சீதாப்பாட்டியை தங்களது சொந்தப் பாட்டி தாத்தாக்களாக நினைத்து கலாய்க்கும் பல நண்பர்கள் எனக்கிருந்தனர். எப்படியென்றால் நாங்கள் அப்புசாமி, சீதாப்பாட்டியை புத்தகமாக தரிசித்த அதே காலகட்டத்தில் தான் தூர்தர்ஷனில் காத்தாடி ராமமூர்த்தி, வத்சலா ராஜகோபால் தயவில் நாங்கள் புத்தகத்தில் கண்ட உருவங்கள் இரண்டும் கனகச்சிதமாக அப்புசாமி, சீதாப்பாட்டியாக கண் முன்னே தொலைக்காட்சித் திரையில் உலவியபடியால் நாங்களெல்லோருமே அப்போது அவர்களது தீவிர ரசிகர்களாக இருந்தோம்.

அப்புசாமி மாதிரியான அப்பாவி தாத்தா கதாபாத்திரமும், சீதாபாட்டி மாதிரியான கட்டுப்பாடான மெஜஸ்டிக் பாட்டி கதாபாத்திரத்தையும் பாக்கியம் ராமசாமியைத் தவிர அவருக்கு முன்னேயும் சரி பின்னேயும் சரி எவரும் படைத்திருக்கவில்லை. அது தான் அந்தக் கதாபாத்திரங்களுக்கான மகத்தான வெற்றி!

சென்னைக்கு வந்த புதிதில் ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன் எனும் பாக்கியம் ராமசாமியை நேரில் ஒருமுறை சந்திப்பது பற்றி பெரிய திட்டங்கள் எல்லாம் கூட இருந்தன எனக்கு;

ஒருமுறை, தீபாவளி மலர் ஒன்றில், ஜ.ரா.சு 70 களில் தான் குமுதம் அலுவலகத்தில் பணிபுரிகையில் அடையாறு தியாசபிகல் சொஸைட்டியில் தனது மாமனார் அன்பளித்த வீட்டில் இருந்து புரசைவாக்கம் குமுதம் அலுவலகத்துக்கு வந்து செல்கையில் தனக்கு நேர்ந்த பேய் பயம் குறித்து ஒரு அனுபவக் கட்டுரை எழுதி இருந்தார். அப்போது சென்னை சாலைகளில் அதிலும் அடையாறு பகுதியில் மின்விளக்கு வசதிகள் எல்லாம் இல்லை. ஒருமுறை அலுவலகத்தில் வேலை முடிந்து ஜ.ரா.சு வீடு திரும்ப நள்ளிரவாகி விடுகிறது. புரசைவாக்கம் அலுவலகத்திலிருந்து தன் வீட்டை அடையும் வரை அவரது மனப்பதற்றத்தை மிகுந்த நகைச்சுவையோடு ஜ.ரா.சு தனது கட்டுரையில் விவரித்திருப்பார். அந்தக் கட்டுரையை நான் வாசித்தது எனது திருமணத்திற்கு முன்பு. ஆனால், திருமணமாகி சென்னை வந்ததும், ஒருமுறை மெரீனா பீச் சென்று விட்டு அடையாறு தியாசபிக்கல் சொஸைட்டி மார்க்கமாக வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் கணவரிடம் அடம் பிடித்து வேலை மெனக்கெட்டு பாக்கியம் ராமசாமி விவரித்திருந்த அந்த அடையாறு ஆலமர தியாசபிக்கல் சொஸைட்டி வீட்டுக்குச் சென்று பார்த்து விட்டு வரலாம் என்று சென்றால் அன்று பார்த்து அங்கே சீதாப்பாட்டிக்கு டேக்கா கொடுத்த அப்புசாமி கதையாக நுழைவாயிலில் ‘இன்று விடுமுறை’ என்ற போர்டு தொங்கியது. நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.

நேற்று மதியம் அலுவலகத்தில் இருக்கும் போதே அவருக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது என்ற தகவல் எட்டியிருந்தாலும் துக்கத்துக்குப் பதிலாக முதலில் சட்டென நினைவிலோடியது அப்புசாமி, சீதாப்பாட்டி சீரிஸில் பலவிதத் தலைப்புகளில் அதுவரை நான் வாசித்திருந்த புத்தகங்களே! இன்று அவர் மறைந்த நிலையில், ஒரு பத்திரிகையாளராக இருந்தும், நான் ரசித்து, ரசித்து வாசித்த ஒரு எழுத்தாளரை இந்த சென்னையிலேயே இத்தனை வருடங்கள் குப்பை கொட்டியும் இத்தனை வருடங்களில் ஒரு முறையேனும் நேரில் சந்திக்காமலே இருந்து விட்டோமே என்று ஒரு பக்கம் விசனமாக இருந்தது... இப்படி விசனப்படுவது முதல்முறையல்ல, முன்பே சிலமுறை சுஜாதா, அசோகமித்ரன், ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் மறைவின் போது வழக்கமாக அப்படித் தோன்றுவது உண்டு! அது ஓர் உணர்வு!

எடிட்டர் என்றொரு புத்தகம்... குமுதம் ஸ்தாபகர் மறைந்த எஸ்.ஏ.பி அண்ணாமலைச் செட்டியாருடனான தங்களது அனுபவங்களை அவரிடம் இதழியல் கற்றுக் கொண்ட மாணவர்களாக தங்களைக் கருதிக் கொண்டு குமுதத்தின் அன்றைய மும்மூர்த்திகள் ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா.சு. புனிதன் மூவரும் சேர்ந்து எழுதிய நினைவுக்குறிப்புகள் அவை. அதில் ஜ.ரா.சு தனக்கு மேலே படிக்க ஆசை இருந்ததையும், என்ன காரணத்தாலோ அதை எஸ்.ஏ.பி அவர்கள் விரும்பாத காரணத்தால் தன்னுடைய ஆசையை தூக்கிப் போட்டு விட்டு தொடர்ந்து குமுதத்தில் தான் வேலையில் நீடித்ததாகவும் எழுதி இருப்பார். அதை வாசிக்கையில் வருத்தமாக இருந்தாலும் அந்த வருத்தமெல்லாம் அவரது எழுத்துக்களில் ஒரு துளி கூட பிரதிபலித்ததே இல்லையே என்று ஆச்சர்யமாகவும் இருந்தது.

பாக்கியம் ராமசாமி மறைந்தார் என்பது அவரை ஒருமுறை கூட நேரில் சந்தித்திராத என் போன்ற வாசகர்களுக்கு எல்லாம் பெயரளவுக்குத் தான். அவர் என்றென்றும் அப்புசாமியாக எங்களுடன் தொடர்பில் தான் இருக்கப் போகிறார்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பிருந்து தான் முகநூலில் அவரது பக்கத்தில் இணைந்திருந்தேன். வீடு, அலுவலகம், குழந்தைகள் என சதிராடும் வாழ்வில் எப்போதாவது நேரம் கிடைக்கையில் அவரது முகநூல் பதிவுகள் உறித்த வாழைப்பழங்களாக கண்ணுக்கு நேரே காட்சி தருகையில் எப்போதும் வாசிக்கத் தவறியதில்லை. அதிலொன்று அவரது தோசைப்பதிவு... படித்து விட்டு ஆனியன் ரவா தோசை சாப்பிடும் போதெல்லாம் சிரித்து மாளவில்லை இப்போது. நீங்களும் வாசித்துப் பாருங்கள்... 

ஆனியன் ரவா' என்பது ஆனியன் ரவா தோசையையே குறிக்கும். அதுவே மரபு. 'அந்தி வானம் குங்குமமாயிருந்தது' என்பது, அந்தி வானம் குங்குமம் போன்று சிவப்பாயிருந்தது' என்று பொருள்படுகிறதல்லவா?

'உவமைத் தொகை கூறா தொழிந்தது' என்பார் தொல்காப்பியனாரும் ஏனைய இலக்கண ஆசிரியர்களும். (ஹிஹி! அப்படிச் சொன்னார்களா என்ன?)

ஆனியன் ரவாவின் நீள அகல தினுசைப் பார்ப்போம்.

நன்கு தயாரிக்கப்பட்ட ஓர் ஊட்டமான ஆனியன் ரவா முப்பத்தைந்து செ.மீட்டர் நீளமும், இருபத்தைந்து செ.மீட்டர் அகலமும் கொண்ட பரப்பளவில் இருக்கவேண்டும்.

பெரும்பாலும் இந்தப் பரிமாணமுள்ள தோசைகள் ஓட்டல்களில் தான் தயாரிக்கப்படும். வீட்டில் பெண்மணிகளோ ஆண்மணிகளோ எவ்வளவு முயன்றாலும் ஓட்டல் தயாரிப்பளவுக்குப் பரந்த ஆனியன் ரவா செய்வது கடினம்.

தோசைக்கல்லின் அளவு, மனசின் அளவு, மாவின் அளவு, தரப்படும் சூடு, விடப்படும் எண்ணெய், சாப்பிடப் போகிறவரின் அவசரம், தயாரிப்பவர் ஒதுக்கும் நேரம் இவைகள் ஓட்டல், வீடு ஆகிய இரு தரப்பினரிடையேயும் மிகுந்த வேறுபாடுகள் கொண்டதாயிருக்கும்.

ஆகவே அசல் ஆனியன் ரவாவை ருசிக்க விரும்புபவர்கள் தரமான ஓட்டலுக்குச் செல்லுவதே இனிமை பயக்கும்.

வீட்டின் தயாரிப்புத் தரம் ஆரோக்யத்துக்கு உகந்ததாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் கலை அழகு கொண்டது ஓட்டலில் தயாரிக்கப்படும் ஆனியன் ரவாவே. இதில் ஏதும் அட்டியில்லை.

அதைச் சாப்பிடுவது ஓர் அருங்கலை. மசாலா தோசை மாதிரி கன்னா பின்னாவென்று எப்படி வேண்டுமானாலும் ஆனியன் ரவாவை சாப்பிடுவது, பரத நாட்டியத்துக்கென அமைந்த அரங்கில் டப்பாங் குத்துக் கூத்து ஆடுவதற்கொப்பானது.

ஆகவே ஆ.ர.வை முறைப்படி, கலையழகோடு சாப்பிடுவது எப்படி என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமாக ஒரு ஆ.ர. 35 செ.மீ. நீளமும், 25 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிட்டோம்.

சில இடங்களில் அளவில் சிறிது வேறுபாடு இருப்பது உண்டு.

ஆ.ர. தயாரிக்கப்பட்டவுடன் அதனை 22 செ.மீட்டர் விட்டமுள்ள தட்டில்,
19 செ.மீட்டர் வட்ட இலையின் மேல் வைத்து சப்ளையர் கொண்டு வருவார்.

ஆர்டர் கொடுத்து முப்பத்தேழு நிமிடங்களுக்குப் பிறகுதான் ஆனியன் ரவா கொண்டுவரப்படும்.

சாதா தோசைக்கு ஆர்டர் கொடுத்தவர் மாதிரி சிலர் அவசரப்படுவார்கள். அது தவறு. முழு வளர்ச்சி அடைந்த ஆ.ர. பொன்னிறத்தையும், முறுகலான தன்மையையும் அடைய அவ்வளவு மணித்துளிகள் தேவை.

ஆர்டர் கொடுத்துப் பொறுமை இல்லாத சிலர், ஆ.ர. தயாராகி வருவதற்குள் வேறு ஏதாவது பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே என்று போண்டா பஜ்ஜி என்று எதையாவது 'டைம் பாஸ்' ஆகச் சாப்பிடுவார்கள். இது மகா தப்பு.

ஒரு குறிஞ்சிப் பூ மலர பன்னிரண்டு வருஷம் காத்திருக்கும் ஆர்வம் உள்ளவனுக்குத்தான் அது பூத்ததும் அதன் அருமையும் அழகும் தெரியும்.

அரைமணி நேரம் காத்திருக்கும்போது மாகஸீனோ, பத்திரிகையோ படிக்கக்கூடாது.

சிலர் பத்திரிகை படித்தவாறே டிபன் சாப்பிடுவார்கள்.

மிகவும் கண்டிக்கத் தக்கது இது. செய்திச் சுவையில் தோசைச் சுவை எடுபடாமலோ அல்லது ருசியில் சில விழுக்காடுகள் குறைவதற்கோ வாய்ப்பு உண்டு.

ஆகவே ஆனியன் ரவா வரும்வரை அதைக் கற்பனையில் கண்டு, கற்பனையிலே வரவேற்று, உமிழ் நீர்ச் சுரப்பிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தோசைக்கு ஏதோ பறக்கிற பக்கி என்று யாரும் எண்ணிவிட மாட்டார்கள். அப்படியே நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. விலையுயர்ந்த ஒரு கலையைப் பயில்வது என்றால் நாலுபேர் நாலுவிதமாகத்தான் சொல்லுவார்கள். பரவாயில்லை ஆனியன் ரவா வரும் வரை அதைப் பற்றியே சிந்தியுங்கள். நாசியால் சிந்தியுங்கள் கண்களால் சிந்தியுங்கள், நாவினால் சிந்தியுங்கள், ஸ்பரிசத்தால் சிந்தியுங்கள், புத்தியால் சிந்தியுங்கள்.

முதலிரவில் மனைவியை எதிர்கொள்ளக் காத்திருக்கும்போது ஏற்பட்ட மெய்ப்பாடு, ஆனந்தக் களிப்பு உடம்பில் உங்களுக்கு ஏற்பட வேண்டும்.

வந்துவிட்டது சிறப்பு ஆனியன் ரவா.

மேஜை மீது வைத்து விட்டார் வெயிட்டர். இப்போது வெயிட்டரிடம் 'நீங்கள் தயவு செய்து ·பேனை அணையுங்கள், அல்லது சின்னதாக வையுங்கள்!' என்று கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆ.ர.வின் முதல் எதிரி மின் விசிறிதான். அதன் ருசியில் நாற்பத்தொன்பது சதவிகிதத்தை வகிப்பது அதனுடைய சூடுதான்.

ஆகவே அந்தச் சூட்டைப் போக்குகிற முயற்சி செய்யும் மின் விசிறி சுழலாதிருப்பதே நல்லது.

மேஜைமீது தட்டில் உள்ள ஆ.ர.வை விரலால் ஸ்பரிசியுங்கள். நாசியால் மணத்தை அனுபவியுங்கள். கண்ணால் அதன் பொன்னிற விளிம்புகளையும், இதர லாவண்யங்களையும் காவியக் கண்ணோடு கண்டு களியுங்கள்.

சூரியனென்றால் சுற்றிலும் உபகிரகங்கள் போல் பச்சை நிறமொரு சட்னி, பழுப்பு நிறமொரு சட்னி, இனம் தெரியாத இன்னொரு வகை சட்னி, வெள்ளை நிறமொரு சட்னி, அப்புறம் ஷேவிங் கிண்ணத்தில் சாம்பார் - ஆ.ர.வை மேலும் நன்கு கவனியுங்கள். ஆ.ர.வானது பிளேட் வட்டத்துக்குள் அடங்காமல் பல இடங்களில் மேஜையைத் தொட்டுக் கொண்டிருக்கும்.

ஆ.ர.வின் சிறப்புகளில் இது ஒன்று. என்னதான் மடித்திருந்தாலும் அதனுடைய சில விளிம்புகள் ஓட்டலில் எச்சில் மேஜையை உரசிக் கொண்டிருக்கும்.

கண்டும் காணாதது மாதிரி சிலர் அதை மடித்து உள் எல்லைக்குள் அடக்கிக் கொள்வர்.

அது சரியல்ல. அவ்வளவு ரூபாய் கொடுத்துவிட்டு அதை ஊரார் எச்சில் பட வைக்கலாமா?

தனியே ஒரு பிளேட் கொண்டுவரச் சொல்லி கவனமாக விளிம்பு சர்வே செய்து மேஜையோடு ஒட்டியிருக்கும் பகுதிகளை மெதுவாகப் பிய்த்து அந்தத் தனி பிளேட்டில் போட்டு விடுங்கள்.

இந்த ஆபரேஷனை செய்யும்போது உங்களுக்கு மனசு கஷ்டமாகத்தான் இருக்கும். ஐயோ 'மொறு மொறு' பகுதியெல்லாம் அநியாயமாக வீணாகிறதே என்று, வெயிட்டரிடம் வேறு தோசை கொண்டுவரச் சொல்லி வம்படி அடித்துக்கொண்டிருந்தால் ரசனை போய், ரகளைதான் மிஞ்சும்.

நாம் ஆ.ர.வின் புற அழகை மட்டுமல்ல. தூய்மையையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அழகான பெண் குணவதியாகவும் இருந்தால் அந்த அழகு இரட்டிப்பாகுமே.

இப்போது சாப்பிடத் தொடங்குங்கள். கட்டை விரல் நீங்கலான மீதி நான்கு விரல்களால் அதை லேசாக அழுத்திப் பாருங்கள்.

சரிவின் உச்சி சிறிது மெத்தென்றும் கீழே இறங்க இறங்க முறுகலாகவும் இருக்கும். நல்ல சாதி ஆ.ர.வுக்கு அதுதான் அடையாளம்.

ஆ.ர.வின் சருமத்தை நிதானமாகக் கவனியுங்கள். நுணுக்கமான ஆபரேஷன் செய்யும் சர்ஜன் மாதிரி உற்றுக் கவனியுங்கள்.

மேல் மடிப்பு எது? உள் மடிப்புகள் எவை?

'மொத்தமாகக் காட்டுத்தனமாக ஸ்பூன்களைச் செலுத்தி ஆ.ர.வைச் சிதைப்பவன் நரகத்துக்குப் போவான்' என மெனு தர்மசாத்திரம் கூறுகிறது.

ஆகவே லேயர் லேயராகவே சாப்பிடவேண்டும். சாம்பாரையோ, சட்டினி தினுசுகளையோ அதன் மீது கொட்டி அதன் முறுகல் தன்மையைப் போக்கிவிடாதீர்கள்.

கடைசிவரை இளமையோடிருக்கக் கூடிய ஆ.ர.வை இளமையிலேயே மூப்பு தட்டிவிட வைத்துவிடாதீர்கள். முதல் லேயரைச் சிறிது சிறிதாக ஒடித்துச் சட்டினியோ, சாம்பாரோ சிறிது சிறிது தொட்டுக் கொண்டு சாப்பிடுவதே அழகு.

நன்கு தயாரிக்கப்பட்ட ஆ.ர.வானது சிறு சிறு, பெரு, பெரு பல்வேறு அளவிலான துவாரங்கள் கொண்டதாக இருக்கும். ஆகவே பிய்ப்பது எளிது.

முதல் லேயர் முடிந்ததும் ஆ.ர.வைத் திருப்பிப் போடுங்கள்.

முதல் லேயரின் மறுபாதி தோசையில் அடிப்பகுதியில்தானிருக்கும்.

அதையும் உரிய மரியாதை கொடுத்து சாப்பிட்ட பிறகு இரண்டாம் லேயர் பிறகு மூன்று நான்கு.

சில சமையல் வித்தைக்காரர்கள் மூன்றே மடிப்பில் ஆ.ர.வைச் சுருட்டி விடுவார்கள்.பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் அது அவ்வளவு உயர்ந்த ரகமல்ல. அப்புறம் ஸ்பெஷல் சாதாவுக்கும், ஆ.ர.வுக்கும் என்ன வித்தியாசம்?

இடைஇடையே சட்னி, சாம்பார் கேட்காதீர்கள். அது வராது. அல்லது வரத் தாமதமாகும். வருகிற வரையில் ஆ.ர.வை ஆறப் போட்டுக் காத்திருந்தால் அதன் ருசியே பாழாகிவிடும்.

ஆகவே ஆ.ர. வந்தவுடனேயே அதிகப்படி சட்னி சாம்பாருக்கு ஆர்டர் கொடுத்துவிடுங்கள்.

கான்கிரீட் வேலை தொடங்கியாயிற்று என்றால், ஜல்லி காய்வதற்குள் சரசரலெனக் கொட்டப்படுவதுபோல ஆ.ர. ஆறுமுன் சாப்பிட்டு விடவேண்டும்.

எப்படி வேகமாகக் சாப்பிட்டாலும் கடைசி ஐந்து நிமிடத்தில் மிச்சமுள்ள பகுதி ஆறிவிடும். அந்தப் பகுதிகளுக்கு மட்டும் சூடான சாம்பாரை அப்ளை செய்யவும். (அல்லது அந்தக் பகுதியை நிராகரித்து விட்டு எழுந்து விடலாம்.)

இப்போது சாப்பிட்டாயிற்று. வாய் பூரா ஆனியன் ரவா தோசையின் நறுமணம்.

அத்துடன் எழுந்து விடுங்கள். காப்பியோ, கூல்டிரிங்ஸோ எதுவும் சாப்பிடக் கூடாது.

சாப்பிட்டால் நீங்கள் இவ்வளவு நேரம் கலைச் செறிவோடு உழைத்த உழைப்பு, கலை வீணாகிவிடும்.

வாயில் அந்த கமகமப்பு ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும்.

நீங்கள் அடுத்து சந்திப்பவர்கள் "என்ன, ஆனியன் ரவா சாப்பிட்டுட்டு, வந்தீர்களா? கமகமன்னு வாசனை தூக்குகிறதே" என்று விசாரிக்க வேண்டும்.

முக்கிய பின் குறிப்பு

ஆனியன் ரவா ரசிகர்களில் 'வீர ஆ.ர.ர' என்று ஒரு பிரிவினர் உண்டு.

அவர்கள் சட்னி தினுசுகளோ சாம்பாரோ எதையும் தொடமாட்டார்கள்.

ஆ.ர.வுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி எண்ணெய் மட்டுமே சேர்த்துக் கொள்வர். மிளகாய்ப்பொடி கால், எண்ணெய் (சுத்தமான நல்லெண்ணெய்) முக்கால் என்ற விகிதத்தில் மிளகாய்ப்பொடி எண்ணெயின் கலவை இருக்க வேண்டும்.

ஆ.ர.வை கட்டுரையில் கூறியுள்ளபடி ரசித்துச் சாப்பிட்டவர்களும், சாப்பிட்டதைப் பார்த்தவர்களும், சாப்பிட்டதைக் கேட்டவர்களும் நீங்காத ருசி பெற்று வாழ்வார்களாக! 

- இப்படி முடிகிறது பாக்கியம் ராமசாமியின் ஆனியன் ரவா தோசை மகாத்மியம். பொறுமையாக வாசித்து முடிப்பவர்களுக்கு கண்டிப்பாக உடனே ஒரு ஆனியன் ரவா தோசை ஆர்டர் செய்யத் தோன்றும். அத்தனை ரசனையான எழுத்துக்காரர் அவர்.

இன்று அவர் இல்லை. ஆனாலும் அவரது எழுத்துக்கள் அப்புசாமியாகவும், சீதாப்பாட்டியாகவும், ஆனியன் ரவா தோசைகளாகவும் நம்முடன் என்றென்றும் பயணிக்கும்.

ஜ.ரா.சு அலைஸ் பாக்கியம் ராமசாமியை நேரில் கண்டு உறவாடியவர்களுக்குத் தான் அவரது மறைவினால் உண்டான இழப்பின் வலி அதிகமிருக்கும்... எங்களைப் போல அவரைக் காணாது வாசித்தவர்களுக்கு அவர் எப்போதும் ‘லேட்’ ஆகவே முடியாது. அவரது புத்தகங்கள், பதிவுகள், தொலைக்காட்சித் தொடர்கள் என எங்களுடன் அவர் எப்போதும் உயிருடனே உலவிக் கொண்டிருப்பார்.

அதனாலென்ன? போய் வாருங்கள் ‘சு’ உங்களுக்கு முன்னமே மேலுலகம் சென்று காத்துக்கொண்டிருக்கும் உங்களது எடிட்டர் ‘அ’ வுக்கும் உற்ற தோழர் ‘ர’ வுக்கும் இனி கவலையேது?!

Image courtesy: comicstamil.blogspot.com, appusamy.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com