பூடான் அரசர் ஜிக்மே கேசர் காதலி ஜெட்சனை மணந்தது 2010-ஆம் ஆண்டு என்றாலும், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது சென்ற ஆண்டுதான். ஜிக்மே கேசர் - ஜெட்சன் காதல் உலகப் பிரசித்தி பெற்றது. சுவாரஸ்யமானது. நீண்ட காலம் நீண்டிருந்த காதல் இன்றைக்கும் தொடர்கிறது.
பூடான் ராணியான ஜெட்சன் நல்ல அழகு. உலகில் பல நாடுகளில் இருக்கும் ராணிகளில் வயதில் சின்னவர். ஜெட்சன் அரச குடும்பத்தினைச் சேர்ந்தவரல்ல. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவர் பூடான் ராணியாவதற்கு காரணம் தீராக் காதல் தான்.
ஜெட்சனின் தந்தை விமான பைலட். அம்மா இல்லத்தரசி. இருவரும் பழைமை விரும்பிகள். ஜெட்சனின் தந்தை மகளை இந்தியாவில் படிக்க வைத்தார். பூடானைவிட, இந்தியாவில் கல்வித் தரம் உயர்வாக இருப்பதுதான் காரணம். இந்தியாவில் பள்ளிப் படிப்பைப் படித்த ஜெட்சனுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது.
பள்ளியில் கூடைப்பந்து விளையாட்டின் அணித்தலைவராக இருந்தார். இதுதவிர ஓவியம் வரைவது, பள்ளிகளில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதிலும் ஜெட்சன் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பள்ளியில் நடக்கும் கலைப் போட்டிகளில் பரிசுகள் பெற்று வந்த ஜெட்சன் ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாகப் பேசும் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இந்தியாவில் பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் சேர இங்கிலாந்து போனார். அங்கு பன்னாட்டு உறவுகள் குறித்து படிக்க ஆரம்பித்தார். ஆனால், படிப்பைத் தொடர முடியாமல் போனது. திருமணம் படிப்பிற்குத் தடையாக நின்றது.
அப்போது ஜெட்சனுக்கு வயது 21. ஜெட்சனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் பூடான் மன்னர் என்ற செய்தியைக் கேட்ட பூடான் மக்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். இந்த ஆச்சரியம் ஜெட்சன் படித்த கல்லூரியிலும் எதிரொலித்தது.
"ஒரு நாட்டின் மன்னர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரே'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
மன்னர், ஜெட்சனிடம் மயங்கிய காதல் கதை அப்போது யாருக்கும் தெரியாது.
பூடான் மன்னர் கேசர் தனது குடும்பத்தினருடன் பூடானின் தலைநகரான திம்புவில் சுற்றுலா சென்றிருந்த போது தற்செயலாக ஜெட்சனை சந்தித்துள்ளார்.
அப்போது கேசருக்கு வயது 17, ஜெட்சனுக்கு வயது ஏழு. பார்க்க லட்சணமாக இருந்த ஜெட்சனிடம் கேசர் சும்மா பேசியிருக்கிறார். ஜெட்சனும் எந்த தயக்கமும் இல்லாமல் பேச, கேசருக்கு ஜெட்சனை மிகவும் பிடித்துப் போனது.
ஜெட்சனின் சாதுர்யமான பேச்சிலும், அசாதாரண அழகிலும் மயங்கிய கேசர், ஜெட்சன் சிறுமி என்பதை மறந்து, " நீ தான் எனக்கு மனைவியாக வரவேண்டும்.. நீ வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனதும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் அதுவரை உனக்காகக் காத்திருப்பேன்''. என்று மனம் நெகிழ கேசர் சொல்ல.. எல்லாம் புரிந்தது மாதிரி ஜெட்சன் தலையை ஆட்டி வைத்தார்.
பள்ளிப் படிப்பை முடித்த ஜெட்சன், இங்கிலாந்தில் கல்லூரிப் படிப்பை தொடரும் போது கேசரின் காதலைப் ஒரு புரிதலுடன் ஏற்றுக் கொண்டு பரஸ்பரம் காதலிக்கத் தொடங்கினார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் இவர்களது காதல் கதையின் குட்டு உடைப்பட்டது. பூடானின் மிக முக்கியச் செய்தியாக மாறியது.
திருமணம் படு கோலாகலமாக நடந்தது. பூடான் குடிமக்களை தனது திருமணத்திற்கு அழைத்திருந்தார் அரசர். திருமணம் நடந்த போது கேசருக்கு வயது 31..
திருமணத்திற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் ஜெட்சனைப் புகழ்ந்து கேசர் பேசியதும், ஜெட்சனின் கரங்களைப் பற்றியவாறு பொது மக்களுக்கு காட்சி தந்ததும், பூடானில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்கள்.