நடிகை சாவித்ரியின் வாழ்க்கை ‘மகாநதி’ என்ற பெயரில் திரைப்படமாகவிருப்பது பழைய செய்தி. சர்வதேச மகளிர் தினமான இன்று மார்ச் 8 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்பதோடு மகாநதியில் இருந்து நடிகை சமந்தா ரூத் பிரபு விலகவில்லை என்பதும் புதிய செய்தி.
'மகாநதி'யைப் பொறுத்தவரை சமந்தா நடிகை சாவித்திரியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை. சாவித்ரியாக வரப்போவது நடிகை கீர்த்தி சுரேஷ் என்பதில் மாற்றமில்லை. பிறகு சமந்தாவுக்கு என்ன வேலை? என்கிறீர்களா? சமந்தா இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மேலும் சாவித்ரியின் மகாநதி தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக வெளிவர இருப்பதால், இரண்டிலும் சாவித்திரியின் நாயகர்களாக நடித்த பிரபல தமிழ், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி, சாவித்ரியின் கணவர் ஜெமினி இவர்களது வேடங்களை எல்லாம் ஏற்று நடிக்கவிருக்கும் நடிகர்கள் யார்? என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
60, 70 களில் நடித்த நடிகைகளில் சிறந்தவர்கள் பலர் இருந்தார்களே... அவர்களில் சாவித்ரிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் வாழ்க்கைச் சித்திரம் உருவாக்கும் அளவுக்கு என படத்தின் இயக்குனர் அஸ்வின் நாக் கிடம் கேட்டதற்கு. அன்றைய கால கட்டத்தில் சிறந்த நடிகைகள் பலர் இருந்திருக்கலாம். ஆனால் 'மகாநதி சாவித்ரி' எனத் தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' சாவித்ரி எனத் தமிழிலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது சாவித்திரியை மட்டும் தான். சாவித்திருக்கு மட்டுமே தமிழ், தெலுங்கில் ஆண்கள், பெண்கள் என பாரபட்சமே இல்லாமல் கணக்கற்ற ரசிகர்கள் இருந்தார்கள். எனவே தான் அவரது வாழ்க்கையை படமாக்கும் எண்ணம் வந்தது எனத் தெரிவிக்கிறார்.