நவநீதம் என்றொரு பால்வாடி டீச்சர் முதல் முதுகலைக் கல்லூரிப் பேராசிரியர்கள் வரை அனைவருக்குமாய்...

ஆங்கிலம் கற்பிப்பது என்றால் அவரைப் பொறுத்தவரை, ஆங்கிலப் பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு டெஸ்க் வாரியாக ஒவ்வொரு மாணவ, மாணவியாக பாடத்திலிருக்கும் ஒவ்வொரு பத்தியாக வாசித்து முடிக்கச் சொல்வதே
நவநீதம் என்றொரு பால்வாடி டீச்சர் முதல் முதுகலைக் கல்லூரிப் பேராசிரியர்கள் வரை அனைவருக்குமாய்...

இன்று செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்!

என்ன எழுதுவது?

ஏதாவது எழுதி ஆக வேண்டுமே... அது தானே அவர்களுக்கு நான் செய்யக்கூடிய மிகச்சிறந்த நன்றிக்கடனாக இருக்கக் கூடும்! என்றதுமே சட்டென்று நினைவில் நிழலாடியவர்கள் எனக்கு பால்வாடியில் தொடங்கி கல்லூரிக் காலம் வரை கல்வி கற்பித்த சரஸ்வதிகளே! (ஆண் ஆசிரியர்களை வேண்டுமானால் பிரம்மாக்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளலாம், அதில் ஆட்சேபணை ஏதுமில்லை)

பால்வாடியில் இருந்து துவங்குவோம்...

நவநீதம் என்றொரு பால்வாடி டீச்சர்...

இன்னும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறார். மிஞ்சிப் போனால் 4 வயதிருக்கும் எனக்கு. இன்னும் மறக்கவில்லை அவர் முகம். ஒடிசலாய் கமலா காமேஷ் போலிருக்கும் அந்த டீச்சரை அங்கு அப்போது படித்து வந்த எங்கள் எல்லோருக்குமே ரொம்பவே பிடிக்கும்.

அம்மா
ஆடு
இலை
ஈ... இதெல்லாம் அவர் தான் அறிமுகப் படுத்தினார் .இப்போது என் மகளுக்கு தமிழ் கற்பிக்க உட்காரும் போதெல்லாம் தவறாமல் நவநீதம் டீச்சரும் ஞாபகத்தில் நிழலாடுகிறார்.

அடுத்து ஒன்றாம் வகுப்பில் கனகவல்லி டீச்சர்... 

டீச்சருக்கு அநேகம் பேரை பிடிக்காது... டீச்சரையும் எல்லா மாணவர்களுக்கும் பிடிக்காது .காரணம் கனகவல்லி டீச்சர் எப்போதுமே சரியாக வீட்டுப் பாடம் செய்து கொண்டு வராதவர்களை எல்லாம் வயிற்றைப் பிடித்து இழுத்து, அழுத்திக் கிள்ளுவார். வலிக்கும். அந்த வலி தான் அவர்களை எப்போதும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவுகிறது. என்றாலும் இப்போதெல்லாம் டீச்சரை எங்கேனும் காண நேர்ந்தால் முன்பு போல கிள்ளுவாரோ என்று சற்று ஓரம் ஒதுங்கியே மரியாதை நிமித்தம் "நல்லா இருக்கீங்களா டீச்சர்?!" என்று கேட்டு விட்டால் போதும் டீச்சர் கண் கலங்கி விடுவார். அப்போது பிடிக்காத டீச்சர் இப்போது எல்லோருக்கும் பிடித்தவராகி விட்டார். வயோதிகத்தில் அவரைப் பார்க்க நெஞ்சில் ஏதோ கலக்கம் நிழலாடவே செய்கிறது (பின்னே நமக்கும் வயதாவதை டீச்சரின் மரியாதை பன்மை உணர்த்துவதைஎப்படி விளக்க?)

இரண்டாம் வகுப்பில் பாஞ்சாலி டீச்சர் ...

சுருள்... சுருளான கேசம்... ‘குவைத் சேலை’ என்று அப்போது ஒரு சேலை ரகம், படு பிரபலம். டீச்சரின் தம்பியோ அல்லது அண்ணனோ அப்போது குவைத்தில் இருந்திருந்திருக்கலாம்?! டீச்சர் விதம் விதமாய் கலர்... கலராய் பூக்களும் கோடுகளும் விரவிய அந்தச் சேலைகளைப் படு பாந்தமாக உடுத்திக் கொண்டு வருவார். அதோடு கண்டிப்பான டீச்சரும் கூட! அவரது சின்சியாரிட்டியைப் பார்த்து இப்போது கூட வியப்பு வரும். அவரது வேலையில் அவர ரொம்பவும் பெர்ஃபெக்சன். திட்டுவதோ ...கிள்ளுவதோ அன்றி ஒரே உருட்டுப் பார்வையில் எங்கள் எல்லோரையுமே சமாளிக்கும் கலையை அவர் எங்கு கற்றாரோ? என்று அப்போது ஆச்சரியப் பட்டிருக்கிறோம். அவரிடம் பயின்ற ஓராண்டு முழுக்கவே நாங்கள் வீட்டுப் பாடத்தை தவற விட்டதே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரது திறமையை. இரண்டாம் வகுப்பில் இரண்டு செக்சன்கள் இருந்ததால் அவரது வகுப்பில் பயில நீ?! ... நான்?! என்று போட்டி கூட உண்டு அப்போது.

மூன்றாம் வகுப்பில்... அம்மாவின் பணி மாறுதல் காரணமாக வேறு ஒரு ஊரில் ஒரு கிருஸ்தவ நடுநிலைப் பள்ளியில் படித்தேன். அங்கே;

மூன்றாம் வகுப்பில் எஸ்தர் ராணி டீச்சர்...

முக்கால் வருடம் மட்டுமே அங்கு படித்ததால் பள்ளியின் அட்மாஸ்பியர் பழகவே எனக்கு முக்கால் வருடத்தில் பாதி வருடம் ஓடி விட... மிஞ்சியத்தில் அந்த வருடம் எனக்கு ஞாபகம் இருப்பது, எஸ்தர் டீச்சர் எப்போதும் தவறாது வலது கையில் அணியும் சிவப்பு நிற பிளாஸ்டிக் மோதிரம் மட்டுமே. அதன் முகப்பில், குழந்தை ஏசுவைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அன்னை மேரியின் படம் இருக்கும். இந்த மோதிரம் வாங்கி டீச்சர் போலவே வலது கையில் அணிந்து கொண்டு கரும் பலகையில் எழுதுவதாக நாங்கள் அப்போது பாவனை செய்ததெல்லாம் இன்றைக்கு இனிக்கும் நினைவுகள் .

நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பில் கிருஷ்ணவேணி மற்றும் சரோஜினி  டீச்சர்... 

இவர்கள் இருவருமே ரொம்ப ஒற்றுமையான டீச்சர்கள்... பாடம் எடுத்த நேரம் போக மீதி இடைவேளை நேரங்களில் எல்லாம் அவரவர் வாங்கிய புது சேலைகள்... நகைகள்... பள்ளியில் மற்ற டீச்சர்களைப் பற்றிய பொது விஷயங்கள்(!!!) இப்படி எதையேனும் பேசிக் கொண்டிருப்பார்கள்... அவ்வப்போது ஆஃபீஸ் ரூமில் இருந்து ஜில்லென்று மண் பானைத் தண்ணீர் சொம்பில் நிரப்பி வர எங்கள் பக்கம் திரும்புவார்கள். ’டீச்சர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து தர... எங்களுக்குள் நீ...நான் என்று ஓட்டப் பந்தயமே நடக்கும்!’ அப்போது அதிலொரு சுவாரஷ்யம் இருக்கத்தான் செய்தது. இப்போதும்" சோழர் காலம் இந்தியாவின் பொற்காலம்" என்று எங்கேனும் காதில் கேட்க நேர்ந்தால் எனக்கு சரோஜினி டீச்சர் ஞாபகம் வரும். ‘திசைகள் நான்கு’ பாடம் கேட்க நேரும் போது கிருஷ்ணவேணி டீச்சர் நிழலாடுவார். அதென்னவோ அவர்களைப் பற்றி நினைத்துக் கொள்ள எத்தனையோ சம்பவங்கள் இருந்த போதிலும் இப்படிச் சில குறியீடுகள் அதனதன் பாட்டில் தானாகவே அமைந்து விடுகின்றன.

ஆறிலிருந்து எட்டுவகுப்பு வரையிலும் சார்களே கோலோச்சினர் ...நோ டீச்சர்ஸ் அந்த காலகட்டங்களில்.

ஆறாம் வகுப்பில் ராமு வாத்தியார்...

என் மொத்த வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஆசிரியர் என்றால் அதில் முதலில் வரக்கூடியவர் இவரே! சற்றே காமராஜரை நினைவுபடுத்தும் முகச்சாயல். அப்போதே அவருக்கு ஓய்வு பெற ஏழெட்டு வருடங்களே மீந்திருந்தன. மிகச் சிக்கனவாதி, நான் படித்தது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாதலால் ஆசிரியர்களில் பெரும்பாலோர், அதே ஊரைச் சார்ந்தவர்களாக இருந்தனர். ராமு வாத்தியாரைப் போல வெகு சிலர் பக்கத்து கிராமங்களில் இருந்து வருவார்கள். அப்படி வந்த சிலரிலும் ராமு வாத்தியார் மிகச் சிக்கனவாதியாக எங்களுக்குத் தோன்றினார். ஏனெனில் அவர் எப்போதும் அவரது ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு நடந்தே தான் வருவார். நடந்தே தான் வீடு திரும்புவார். இதைப் பிற ஆசிரியர்கள் ‘கருமித்தனம்’ என கிண்டல் செய்வார்கள். ஆனாலும் ராமு வாத்தியார் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதே இல்லை. ராமு வாத்தியாரால் தான் எங்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் பெருவிருப்பம் ஏற்பட்டது. பொது அறிவு விருத்தியானதும் அவரால் மட்டுமே! ஒரு குக்கிராமத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் மீது தங்களது சொந்த வேலைகளைத் தலையில் கட்டாத ஆசிரியர்கள் வாய்ப்பது மிக, மிக அபூர்வமான செயல். ராமு வாத்தியார் ஒருபோதும் மாணவர்களை சாக்பீஸ், உலக வரைபடங்கள் எடுத்து வரக்கூட ஏவியதே இல்லை. ‘மாணவர்கள் பணி கற்பது, என் பணி மாணவர்களுக்கு விருப்பத்துடன் கற்பிப்பது’ என்ற உறுதியை அவர் தனது பணி இறுதி வரையிலும் மிகச்சரியாகக் கடைபிடித்தார்.

ஏழாம் வகுப்பில் ராமசாமி வாத்தியார்...

இவர் ஒரு வகையில் வகுப்பிலிருந்த பெரும்பாலான மாணவ, மாணவிகளின் உறவினரும் கூட என்பதால் ஆசிரியப் பயம் என்பது இல்லாமலிருந்தது. நகைச்சுவையாகப் பேசுவார். அவர் பாடமெடுப்பதே கவுண்டமணி நகைச்சுவை போல ஒரே கலாட்டாவாகத் தான் இருக்கும். ஆனால் சில நேரங்களில் வகுப்பில் பாடமெடுப்பதைக் காட்டிலும் தன் வயல் மற்றும் தோட்ட வேலைகளைக் கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடியவராக இருந்தார். கேட்டால் ‘வயலும், வாழ்வும்’ கூட அறிவியல் தானே! என்று சொல்வாராக இருக்குமோ என்னவோ?! அவரை பள்ளியில் யாரும் குறை சொன்னதில்லை. மாணவர்களுக்கும் பிடித்தமான ஆசிரியராகவே இருந்து வந்தார்.

எட்டாம் வகுப்பில் சீனிவாச ராகவ வாத்தியார்...

இவர் தான் பள்ளிக்குத் தலைமை ஆசிரியரும் கூட, அதோடு சேர்த்து எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்தார். இவரைப் பெயரைக் குறிப்பிட்டு சார் என்று சொல்வதில்லை, பொதுவாக ஹெட்மாஸ்டர் என்றே குறிப்பிடுவது வழக்கம். ஆங்கிலம் கற்பிப்பது என்றால் அவரைப் பொறுத்தவரை, ஆங்கிலப் பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு டெஸ்க் வாரியாக ஒவ்வொரு மாணவ, மாணவியாக பாடத்திலிருக்கும் ஒவ்வொரு பத்தியாக வாசித்து முடிக்கச் சொல்வதே தவிர வேறில்லை. மற்றபடி இந்த ஆங்கில இலக்கணம், துணைப்பாட நூல் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவே மாட்டார். இவருக்குப் பதிலாக போத்திராஜ் சார் வந்து ஆங்கில இலக்கணம் கற்றுத் தருவார். அவருக்கும் அப்போதிருந்த நிலையில் ஆங்கில இலக்கணம் என்றால் அது பிரசண்ட் டென்ஸ், பாஸ்ட் டென்ஸ், ஃபியூச்சர் டென்ஸ் தாண்டி அதனுள் உள்ளடக்கமான சிம்பிள் பிரசண்ட் டென்ஸ் தொடங்கி ஃபியூச்சர் பெர்ஃபெக்ட் கண்டினியூஸ் டென்ஸ் வரை மட்டுமே. இதையே வருடம் முழுக்க கரும்பலகையில் எழுதிப்போட்டு மனப்பாடம் செய்வித்துக் கொண்டே இருந்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் அறிந்து கொண்ட ஆங்கில இலக்கணம் இவ்வளவே! 

ஒன்பதாம் வகுப்பில் சந்திர பாய் டீச்சர் ...

எங்கள் கிராமத்தில் 8 ஆம் வகுப்பு வரையில் மட்டுமே இருந்ததால்... மேற்படிப்பிற்காக(!!!) அப்பா தேனிக்கு ஜாகை மாற்றினார். அங்கே ஒரு தனியார் உயர் நிலைப்பள்ளியில் நானும், தம்பியும் வாசிக்கத் தொடங்கினோம். உள்ளூர் ராமு வாத்தியாருக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த ரோல்மாடலாக இருக்கத் தக்க குணநலன்கள் கொண்ட ஆசிரியையாக எனக்கு வாய்த்தவர் சந்திரா பாய் டீச்சர். இன்றளவும் எனக்குக் கற்பித்த ஆசிரியைகளில் எனக்கு மிகப் பிடித்தவர். பாடம் கற்பிப்பதிலாகட்டும், மாதிரித் தேர்வுகள் வைப்பதிலாகட்டும், விடைத்தாள் திருத்தி அளிப்பதிலாகட்டும், வரைபடப் பயிற்சி அளிப்பதிலாகட்டும் எல்லாவற்றிலுமே சமூக அறிவியல் கற்பிப்பதற்கென்றே பிறந்து வந்தவர் போல இருப்பார் சந்திரா பாய் டீச்சர். என் கல்விக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை என்றால் அது இவர் தான். அதென்னவோ டீச்சருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும்...நான் எப்போதுமே முதல் மூன்று ரேங்குகளில் வந்து விடுவேன் என்று நம்பிய அப்பாவி டீச்சர் அவர்! அவருக்கு மூன்று மகன்கள் ...ஒரே ஒரு செல்ல மகள்... டீச்சர் பல சமயங்களில் தன் மகளை அழைக்கும் செல்லப் பெயரில் என்னையும் ஏதோ நினைவில் அழைத்து விட்டுப் பிறகு ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்ப்பார் ... எனக்கென்னவோ அப்போது அந்தச் சிரிப்பை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருக்கும்.

பத்தாம் வகுப்பில் அனுராதா டீச்சர்...

‘இவர் அடிப்படையில் கணித ஆசிரியை... எனக்கோ கணக்கு பெரும் பிணக்கு... அதனால் பத்தாம் வகுப்பில் காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய காலம் வரை டீச்சரின் வெறுப்பிற்குரிய மாணவிகள் லிஸ்டில் நான் இருந்திருக்கக் கூடும்... ஆனால் எப்படியோ காலாண்டில் டியூஷன் எல்லாம் வைத்துப் படித்து கணிதத்தில் 95 மார்க் எடுத்து கொஞ்சமாக டீச்சரின் அன்பைப் பெற்றாயிற்று... ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது... டீச்சரின் அபிமானம் அல்ல... கணிதப் பாடம்!

பதினோராம் வகுப்பில் கலாமணி டீச்சர்...

இவர் என் உறவுக்காரர்... ஆனாலும் டீச்சர் அதை எல்லாம் பள்ளியில் பார்ப்பதே இல்லை. இவரது தனிச் சிறப்பு ‘கரும் பலகையில் எழுத ஆரம்பித்து விட்டார் என்றால்’ அவரது வகுப்பு (இவர் வேதியியல் பாடம் எடுப்பார்) முடியும் வரை எங்கள் பக்கம் திரும்பவே மாட்டார். அப்படி என்ன விரதமோ?! என்ன தான் உறவென்றாலும் கேட்கத் துணிந்ததில்லை. நிறைய தேர்வு டிப்ஸ் தருவார். அழகான தோற்றம்... பெரும்பாலும் கைத்தறி சேலைகள் அணிவதை விரும்புவார். நகைகள் அணிவதிலோ... தலை நிறைய பூச்சூடிக் கொள்வதிலோ கலாமணி டீச்சருக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை, நாங்கள் அறிந்தவரையில்... புத்தகமும் கையுமாகவே இருப்பார். சக டீச்சர்களிடமும் அளவான "நறுக்" பேச்சு. சதா சக டீச்சர்களப் பற்றியோ, அல்லது அவரவர் குடும்ப சங்கதிகளைப் பற்றியோ வழ வழத்துக் கொண்டிருக்கும் சக டீச்சர்கள் மத்தியில் இவர் ஓர் அபூர்வப் பிறவியென்று தோன்றும் எங்களுக்கு.

பன்னிரெண்டாம் வகுப்பில் பாண்டியம்மாள் டீச்சர்...

இவரை இப்போதும் கூட எங்காவது சந்திக்க நேரும். மிகத் தோழமையான டீச்சர். 12 ஆம் வகுப்பில் எனக்கு கணிதப் பாடம் எடுத்தார். டீச்சர் எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த காரணத்தால் எப்போது வேண்டுமானாலும் டவுட் கேட்கலாம். கொஞ்சமும் சுணங்காமல்... முகம் கோணாமல் எனக்கு கணித சூத்திரங்களைப் புரிய வைப்பார். என் அம்மாவும் டீச்சரும் நல்ல தோழிகள் என்பதும் ஒரு காரணம். டீச்சரின் ஐந்து வயது (அப்போது...இப்போது அந்த சின்னப் பெண்ணுக்கே திருமணம் முடிந்து குழந்தைகள் கூட இருக்கலாம்!) மகள் எந்நேரமும் எங்கள் வீட்டில் தான் இருப்பாள் .

அடுத்து கல்லூரிக் காலம் ...

இங்கு எத்தனையோ ஆசிரியைகள் ...

யாரை சொல்வது... யாரை விடுவது?

இளங்கலைக் கல்லூரிக் காலம்...

எங்கள் துறை தலைவரான "ஸ்ரீ லதா மேடம்... ஆன்சிலரி கெமிஸ்ட்ரி பாடம் எடுத்த ஜெயசித்ரா மேடம்... தமிழ் பாடம் கற்பித்த அருளமுதம் மேடம்... சங்கீதா மேடம்... ஆங்கில இலக்கியம் கற்பித்தஅருள் தெரேஸா மேடம்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்பு மிக்கவர்கள். "ஸ்ரீ லதா மேடம் கண்டிப்பானவர்கள் என்றால் ...ஜெய சித்ரா மேடம் ரொம்ப ஜோவியல்... பிற கல்லூரிகளுக்கோ, பல்கலைக்கழகங்களுக்கோ கலை விழாக்களுக்குப் போவதென்றால் எங்களுக்கு அருளமுதம் மேடம் தான் வர வேண்டும் என்று ஒரே போட்டா போட்டியாக இருக்கும். அருள் தெரேஸா மேடம் ரொம்ப சாஃப்ட் ..இப்படி இவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

முதுகலைக் கல்லூரிக் காலம்...

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழும், இதழியலும் படித்த காலங்கள் பொன்னானவை. அப்போதைய எனது பெருங்கனவே பின்னாட்களில் சிறந்த பத்திரிகையாளராக அடையாளம் காணப்பட வேண்டுமென்பது தான். அப்போது கிடைத்த ஆசிரியர்களில் ரவிராஜும், ஒளிப்பதிவாளர் ஜெகன்னாதனும் குறிப்பிடத்தக்கவர்கள்.  ராமாயணத்தில் சீதை லட்சுமணக் கோட்டை தாண்டும் தருணத்தை மையமாக வைத்து எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் ஒரு குறுங்கதை எழுதியிருந்தார். அதை மையமாக வைத்து நாங்கள் இதழியில் பயிற்சிக் காலத்தில் ஒரு குறும்படம் எடுத்தோம். அவுட்புட் சரியாக அமையாவிட்டாலும் கூட எங்களாலும் படமென்ற பெயரில் ஒரு வஸ்துவைச் சமைக்க முடியும் என்று குதூகலிக்க முடிந்த அற்புதமான கனவுக் காலங்கள் அவை. அமைந்த ஆசிரியர்களும் கூட பெரும்பாலும் ஊக்குவிப்பவர்களாகவே அமைந்து விட்டதால் கற்றுக் கொண்ட காலம் மொத்தமும் இனிமையானதாகவே கழிந்தது.

சரி இனி நன்றி சொல்லும் படலம்... 

என்னுடைய இத்தனை ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியராகப் பேராசானாக நினைவுகூரத்தக்க சர்வபள்ளி டாக்டர் ராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று; அவரது ஞாபகத்தைப் போற்றும் விதத்தில் ஆசிரியர் தினமாக மாற்றம் பெற்ற இந்த நன்நாளில் என்னுடைய பழைய ஆசிரியர்களை எல்லாம் மீண்டுமொருமுறை நினைத்துப் பார்க்க வாய்த்த இந்த சந்தர்ப்பம் மிகுந்த மனநிறைவளிக்கிறது.

“இவர்களோடு ஆசிரியர்களுக்கான லிஸ்ட் முடிந்து விடவில்லை. இந்த உலகில் நமக்கான வாழ்வியலைக் கற்றுத் தரும் ஒவ்வொருவருமே நமக்கு ஆசிரியர்கள் தான் என்பதால் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com