எங்கள் குலதெய்வம் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ வாசகர் குலதெய்வக் கதை - 4!

எனது குலதெய்வம் அருஞ்சுனை காத்த அய்யனார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள மேலப்புதுக்குடியில் அமைந்துள்ளது.
எங்கள் குலதெய்வம் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ வாசகர் குலதெய்வக் கதை - 4!

எனது குலதெய்வம் அருஞ்சுனை காத்த அய்யனார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள மேலப்புதுக்குடியில் அமைந்துள்ளது. இவ்விடம்  அம்மன்புரத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

ஆண்டுதோறும் குலதெய்வத்தினை வழிபட மக்கள் திரளாகப் பங்குனி உத்திரத்தன்று செல்வதுண்டு. இது திருநெல்வேலியில் இருந்து  13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலை எட்டு பங்கு இந்து நாடார் உறவின் முறையினர்  நிர்வகித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் பங்குனி மாதம் உத்திரத்தையொட்டி திருவிழா நடைபெறுகிறது.  நாடார் சமூகத்தினரில் ஒரு சில பிரிவினர் இக்கோவிலை வழிபட்டுவருகின்றனர். பழமையான காலத்தில் திருச்செந்தூரில் ஒலிக்கும் கோவில்மணியும், ஒளி விளக்கும் இங்கு தெரியும் என அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலப்புதுக்குடியில் இருந்து பேருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்குச் சென்று வருகிறது. அருகில் அமைந்துள்ள கற்குவேல் அய்யனார் இவரது சகோதரராகக் குறிக்கப்பட்டுள்ளார். அய்யனார் அரசராகவோ, படைவீரராகவோ இருந்திருக்கலாம். கிராமத்துக் காவல் தெய்வமான அருஞ்சுனை காத்த அய்யனார்  நாடார் வழியினரின் பூர்வீகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தாழைப்புதர்களால் நிறைந்து குளத்திற்கு அருகில் அமைந்திருப்பதால் தாழையடி அய்யனார் திருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

அய்யனார் என்ற சொல்லை அய்(ஐ) அன், ஆர் என மூன்றாகப் பகுத்தால், அதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறாகவும் ஆகிறது, எஞ்சியுள்ள ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும்.

சுமார் 700  ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில்  தடாகம்(பொய்கை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர், பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி  என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி  விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம்  கொண்டார்.

“கவனச்சிதறலால் கால் இடறி விழுந்த  உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அவர் மாண்டுபோவார். இதை நீ  வெளியே தெரிவித்தால் மரணம் உன்னைத் தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம்  சுமத்தப்பட்டு தண்டனைக்காக மரிப்பாய்’’ என்று முனிவர் சாபம் இட்டார். அறியாது செய்த பிழைக்கு மாபெரும் தண்டனையா,’’  என்று மங்கை வினவ, ‘‘பெண்ணே, நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்குப் பிறகு நீ சொர்க்கம் போவாய்’’ என்று  உரைத்தார்.

இந்நிலையில் மன்னன் சிங்கராஜன் தினமும் உண்டு வந்த கனி மரம் தினமும் ஒரு கனி தான் காய்க்கும். அக்கனியை தான் மன்னன் உண்டு வந்தான். மரத்திலிருந்து விழும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் கிடக்கும். அதை யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மன்னனின் காவலாட்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து வந்தனர். வழக்கம் போல் தடாகத்தில் தண்ணீர் எடுத்து வந்த கனகமணியின் குடத்திற்குள் அந்த கனி விழுந்து  விட்டது. இதை காவலாட்களும்  கவனிக்காமல் போகவே, கன்னி கனகமணியும் குடத்து நீருடன் அவள் இல்லம் சென்றாள். வரும் வழியில் இருபத்தோரு தேவதைகள் எதிரில் வந்தன. அவைகள் தாகத்தோடு இருக்கிறோம்... பெண்ணே! தண்ணீர் கொடு என்று கனகமணியிடம் கேட்க, திடுக்கிட்டாள் அவள். காரணம் முனிவர் இட்ட சாபம் நினைவுக்கு வந்தது. சாபத்தை எண்ணித் தண்ணீர் கொடுக்க மறுத்தாள். அப்போது தாகத்தால் நாங்கள் மரணித்து போய் விடுவோம் போல் உள்ளதே என்று கெஞ்சின. மனதைக் கல்லாக்கிய மங்கை கனகமணி தண்ணீர்  கொடுக்க மறுத்து சினத்துடன் வழியை விட்டு விலகி செல்லுங்கள். நான் அனுதினமும் வழிபடும் அரிஹர புத்திரன் மீது ஆணை என்றுரைக்க, தேவதைகள்  வழிவிட்டன. 

கானகத்தில் பசியோடு சிறந்த கனி தேடி மரத்தடி வந்தான் மன்னவன். கனியை  உண்டது உங்களில் யார் என்று வினவ, காவலர்கள், தாங்கள் யாரும் இல்லை என மன்னனிடம் விளக்கி கனி மறைந்த கதையையே மீண்டும் மீண்டும் சொல்ல, மன்னனோ“ கனியோடு வாருங்கள். இல்லையேல் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது’’ என்று எச்சரித்தார். மன்னன் கட்டளையை ஏற்று காவலர்கள் ஊருக்குள் சென்று  எல்லா வீடுகளிலும் தேடினர். கடைசியில் கனகமணி வீட்டில் தேடும் போது குடத்திற்குள் கனி இருக்கக் கண்டனர். கனி எடுத்த காவலர்கள்  கனகமணியை மன்னன் முன் நிறுத்தினர். அப்போது அவ்விடம் வந்த தேவதைகள் குடத்து நீரில் கனியை இவள் களவாடிச் சென்றிருக்கவேண்டும்.  அதனால்தான் குரல்வளை காய்ந்து குடிக்க நீரை மன்றாடி கேட்டும், குமரி இவள் மறுத்துப் போனதன் மர்மம் இப்போது புரிகிறது’’ என்றனர். அப்போது அங்கு  வந்த பேச்சியம்மன், ‘‘முதுமையடைந்த பெண்ணாய் வந்து மன்னா, இவள் களவாடவில்லை. கனி தானாக விழுந்தது’’ என்றுரைத்தும் மன்னன் கேளாமல்  மங்கை இவளுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் கட்டளையை ஏற்ற காவலர்கள் கன்னி கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர். 

இறக்கும் தருவாயில் அரிஹரபுத்திரனை அழைத்தாள். அவள் பக்திக்கு மனமிறங்கி வந்தார் சாஸ்தா. ‘‘கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன்’’ என்றார். இப்பிறவியில் நான் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை விரும்பவில்லை. எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ, அது போல் இனி எவரும்  தண்ணீருக்காக அலைந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இவ்விடம் சுனையாக மாறி இருக்க விரும்புகிறேன். சுனையை யாரும் அபகரிக்காமலும், மற்றவர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேலியிட்டுத் தடுக்காமலும் இருக்க, அய்யனே நீரே, சுனையை காத்தருள வேண்டும்’’ என்றார்.‘‘அருமையான சுனையாக மாறும் உன்னைக் காத்தருள்வேன்  என்று உறுதியளித்த அய்யன் சாஸ்தா, இவ்விடம் அருஞ்சுனை காத்த அய்யனார்’’என்று அழைக்கப்பட்டார். மன்னன் மதி மயங்கி தவறு இழைத்துவிட்டேன் என  எண்ணி, தனது உயிரை மாய்த்துக்கொண்டான். இருபத்தோரு தேவதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோரின. அதன் பின்னர் அவர்களுக்கு தனது இருப்பிடத்தில் இடம் கொடுத்து தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார். மூலவர் பூர்ண, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன்,  தளவாய்மாடன், வன்னியடி ராஜன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கியம்மன், பட்டாணி சாமி, முன்னோடி முருகன் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சுனையில்  குளித்தால் தீராத பிணிகளும் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அய்யப்பனும், அய்யனாரும் ஒன்றே என ஆய்வுகள் பல வெளி வந்துள்ளன. அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்து வருகின்றனர்.
சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றனர். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். சாஸ்தா என்ற பெயரில் சமணர்கள் அய்யனாரை வழிபட்டுவந்துள்ளனர். அய்யனாரின் மனைவியர்களான பூரணை, புட்கலை சமணர்களின் சிறுதெய்வங்களாக இருந்து வந்துள்ளனர். இந்தியக்கடலுக்குள் செல்லும் 90 டிகிரி மலைப்பகுதிகளில் வைடூரிய மலை இருந்தது. அம்மலைத்தொடரின் தென்பகுதியில் தென்மதுரை இருந்தது என்றும், சிவனுக்கும், மீனாட்சிக்கும் பிறந்த உக்கிரகுமாரபாண்டியன் அந்த மலைத்தொடரைச் செண்டால் அடித்து இரத்தினங்களை எடுத்தான் என்று திருவிளையாடல்புராணம் கூறுகிறது. செண்டு என்பது தங்கத்தால் ஆன வளைந்த தடியின் முனயில் பந்து போன்ற அமைப்புடையது என ஆய்வுகளின்வழி அறிய இயலுகிறது. இத்தகைய செண்டினைக் கையில் ஏந்தியபடி அய்யனார் பலஇடங்களில் அமைந்துள்ளார். அய்யனாரே உக்கிரகுமார பாணடியனா! அல்லது அதைப்போன்றே செண்டினைப் பாண்டியன் பரம்பரையினர் ஏற்று வந்துள்ளனரா என்பது சரிவரப் புலப்படவில்லை. 

வடநாட்டில் புட்கலாபுரம் என்ற ஊர் அமையப்பெற்றுள்ளது. இவ்வூர் தென்னன் என்ற பாண்டியனால் ஆளப்பட்டது. புட்கலை இருந்துளளமையால் இவ்வூர் அப்பெயரினைப் பெற்றிருக்கலாம். புட்கலை என்பவள் குறித்து இருவேறுபட்ட கருத்துகள் ஆய்வுலகில் இடம்பெற்றுள்ளன.

சத்யபூரணர் என்ற மகரிஷியின் புதல்விகள் எனப் பூரணை, புட்கலையைக் குறிப்பிடுவர். தெய்வ அம்சம் பொருந்திய ஆணை மணக்க விரும்பிய இப்பெண்கள் இறைவனை நோக்கிக் கடுந்தவம் செய்தமையால் இறைவன் அய்யனாரை மணக்க அருள் புரிந்ததாக வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. அய்யனார் வெள்ளை யானையில் இருப்பதுபோலவும், வெள்ளைக் குதிரையில் இருப்பதுபோலவும் இருவேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ளார். (வஞ்சி)கொச்சியை ஆண்ட பஞ்சகன் - சிந்து மன்னன் மகள் மனோஞை இவர்களது மகள் பூரணை எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. புட்கலையின் பெற்றோர் பளிஞவர்மன்-உஞ்சயினி நாட்டு சாந்தை எனத் தெரியவருகிறது. இவன் சாபமிட்டதால்தான் சாஸ்தா அய்யப்பனாக அவதரித்ததாகக் கதை உண்டு.

மூல தெய்வமான அய்யனாருக்குப் படையல் பொங்கல் பங்குனி உத்திரத்தன்று இடப்படும். பன்னிரண்டு மணி அளவில் உச்சிகால வழிபாடு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இந்திரன் அய்யனாரை வழிபட்டதாகச் செய்திகள் இருப்பதால் அய்யனார் ரிக்வேத காலத்திற்கு முற்பட்டவராகக் கருத இடமுண்டு. யுகங்கள் நான்கு

  • சத்ய யுகம் –கி.மு 17,476முதல் கி.மு 11,710 வரை
  • கலியுகம்-(கி.மு 4516-கி.மு3076)

இராமன் வாழ்ந்த காலம் கி.மு 5114 சனவரி பத்து எனக் குறிக்கப் பெற்றுள்ளதால் இதுவே இந்திரன் வாழ்ந்த காலமாகும்.
ஒரு கல்பத்தில் 14 இந்திரன்கள் வாழ்ந்து வந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு இந்திரன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று வந்துள்ளான்.

இந்திரன் வாழ்ந்த காலத்தில் சாதிகள் தோன்றியிருக்கவில்லை. தொழில் அடிப்படையில்தான் மனித சமுதாயம் அமைக்கப் பெற்றிருந்தன. 
சிவபெருமானுக்குப் பிறந்த வன்னியனை இந்திரனின் மனைவியான இந்திராணிக்குப் பிறந்த மந்திரமாலைக்குத் திருமணம் செய்வித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. சுடலைமாடன், இசக்கிஅம்மன் போன்றவை துணைத் தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். வன்னியராஜன் குதிரைமேல் இருப்பதுபோல இங்கு சிலை அமைத்துள்ளனர். இச்சிலை கோவில் கும்பாபிஷேகத்தின்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. செம்மண் கலந்த பகுதியாக இருப்பதாலும், மண்மேடிட்ட பகுதியாக இருப்பதாலும் இப்பகுதி ஆய்வுக்குட்பட்டது எனத் தமிழாய்வு குறிப்பிடுகிறது.  பங்குனி உத்திரத்தன்று வர இயலாதவர்களின் வசதிக்கேற்ப இக்கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து விருதுநகரில் தைப்பூசத்தன்று வழிபாடு நடத்தி வருகின்றனர். விருதுநகர் நாடாரில் தொழிலின் அடிப்படையாலும், குல தெய்வத்தின் பெயராலும், அடையாளக் குறியீட்டுப் பெயராலும்  பல பிரிவுகள் உண்டு. ஒரே தெய்வத்தினைச் சார்ந்தவர்கள் தமக்குள் திருமண உறவுகளை ஏற்படுத்தாமல் வேறு தெய்வத்தினை வழிபாடு செய்பவர்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வர்.

தேரி மணற்குன்றுகள் உருவான கதை குறித்தும் பேசப்பட்டு வருகிறது.  நன்னன் மாங்கனி கதைபோன்றே அருஞ்சுனைகாத்த அய்யனாருக்கும் கதை இருப்பதை இதன்வழி அறிய இயலுகிறது. அக்காலத்தில் செய்த தொழிலின் அடிப்படையிலேயே மக்கள் வாழ்ந்து வந்துள்ளமையால் பிரிவுகளும் அவ்வாறே இருந்திருக்கிறது. மக்களுடைய அறியாமையினால் சாதிப்பிரிவுகள் உருவானதால் அவை குலவழிபாடுகளாக உருமாறியுள்ளதைக் காண இயலுகிறது.

அய்யனார் 218 பெயரில் உள்ளதாக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்ட கடன் தீரவும், இட்ட துயர் மாறவும் இத்தலம் வந்து அருஞ்சுனை காத்த அய்யனாரை  வழிபட்டால் அவை மாறிவிடுகிறது.

கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்கள்...

1.  பொன்.இராம். வாணி சிற்றிதழ் -3- பிரதிலிபி.காம்.,2017.
2.  பி.ஆர்.இலட்சுமி.,தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.,பிரதிலிபி.காம்.,2016.
3. முனைவர் தசரதன்.,(அருஞ்சுனைகாத்த அய்யனார்.,தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம்.,சென்னை-41.,1995)
4.   (http://thamizhselva.blogspot.in/2014/02/),(http://thamizhan-thiravidana.blogspot.in/2010/12/17)
ந.வைரமணி
Vaira31mani@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com