சுக்கு போல காய்ந்து ஒல்லியாக இருப்பவர்கள் பச்சை இஞ்சி போல வளப்பமாய் மாற வேண்டுமா?

பலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பது பிரச்னை என்றால் ஒரு சிலருக்கு உடல் எடை
சுக்கு போல காய்ந்து ஒல்லியாக இருப்பவர்கள் பச்சை இஞ்சி போல வளப்பமாய் மாற வேண்டுமா?

பலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பது பிரச்னை என்றால் ஒரு சிலருக்கு உடல் எடை குறைவாக இருப்பது பெரும் பிரச்னை. உடல்வாகைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களை ஒல்லிபிச்சான், நோஞ்சான் என்றெல்லாம் மற்றவர்கள் கேலி செய்வார்கள். ஏன் இப்படி சுக்கா போயிட்டே என்றும், காஞ்சு போன கருவாடு கணக்கா இப்படி இருக்கியே என்றும் வெறுப்பேற்றுவார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் உயரமாகவும் இருந்துவிட்டால் ஒட்டடைக் குச்சி, ஒட்டகச் சிவிங்கி என்றும் இடித்துரைப்பார்கள்.

பெண்களைப் பொருத்தவரை நிலைமை இன்னும் மோசம். ஜீரோ சைஸ் பெண்ணுக்கு ஹீரோ கிடைப்பது சற்று சிரமம்தான். பொண்ணு பார்க்க வரும் போதே பெண்ணின் உடல் மெலிவைப் பற்றி கூறிவிடுவார்கள். எல்லோரும் அமுல் பேபியாக எப்படி இருக்க முடியும்? ஒல்லியாக இருந்தால் என்ன ஆரோக்கியமாக இருந்தால் சரி என்று ஆளை விட மாட்டார்கள். ஆள் ஆளுக்கு பல அறிவுரைகள் கூறி வெறுப்பேற்றுவார்கள். மிஸ்டர் ஒல்லியாக இருப்போர் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தால் தீர்வை கண்டு பிடிப்பது சுலபம்.

சிலருக்கு மரபுரீதியாகவே ஒல்லியான உடல்வாகு இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் லேசாக பூசினாற்போல தெரிவார்களே தவிர அவர்கள் குண்டாக மாட்டார்கள். அவர்கள் தேவையில்லாமல் எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே நல்லது. BMI (Body Mass Index)படி உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம்.

சிலர் மன வருத்தத்தில் அல்லது மன அழுத்தத்தில் உடல் எடையை கணிசமாக இழப்பார்கள். காரணம் அவர்களின் பிரச்னையால் சரியாக சாப்பிட மாட்டார்கள். சரியான உறக்கமும் இருக்காது. உடல் எடை குறித்து அலட்சியமாக இருந்தால் அது பல பிரச்னைக்கு மூல காரணமாகிவிடக் கூடும். உடனடியாக மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவரின் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

உடல் எடைக் குறைவாக உள்ளதே என்று கவலைப்பட்டே சிலர் மேலும் இளைத்துவிடுவார்கள். அது நல்லதல்ல. பத்திரிகைகளில் வெளிவரும் டிப்ஸ்லிருந்து யூட்யூப் வரை உடல் எடை அதிகரிக்க யார் என்ன அறிவுரை கூறினாலும், அதனை உடனே கடைப்பிடிப்பார்கள். இது உடல் எடையை அதிகரிக்கிறதோ இல்லையோ, பர்ஸின் எடையை மெலிய வைத்துவிடும்.

நல்ல சத்தான உணவை சாப்பிட்டு, தினமும் யோகாசனம், பிரணாயாமம் போன்ற பயிற்சிகளை செய்தால் போதும் உடல் எடையைச் சரியான அளவில் பராமரிக்க முடியும். வெண்ணெய், நெய், பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், வேர்க்கடலை, நட்ஸ் போன்றவற்றை அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. சாப்பிட்ட உடன் டாய்லெட்டுக்கு போக நேரிடும். இதனை இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) என்பார்கள் மருத்துவர்கள். வெளியிடங்களில் காரமான உணவுகள் சாப்பிட்ட உடன் அல்லது சூடான காபி அல்லது டீ குடித்தவுடன் வயிற்றைக் கலக்கிவிடும். இதனை கழிச்சல் நோய் என்பார்கள். இந்தப் பிரச்னை இருந்தால் எவ்வளவு சாப்பிட்டாலும் அது உடம்பில் ஒட்டாது. உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதுடன் சோகை ஏற்பட்டு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவுகள் அடிக்கடி குறையும். குறைந்த ரத்த அழுத்தம் அல்லது தலை சுற்றல் ஏற்படலாம். எனவே இந்தப் பிரச்னை இருப்பவர்கள் உரிய மருத்துவரைச் சந்தித்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தினமும் தேன் மற்றும் மாதுளம் பழத்தை சாப்பிடுவது இவர்களது பிரச்னையை சீர் செய்து, மெள்ள உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். 

வயிற்றில் புண், அல்லது பூச்சி இருந்தாலும் உடல் எடை குறைவாகவே இருக்கும். சிலருக்கு குடல்புண் ஏற்பட்டு அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் உடல் மெலிந்து கொண்டே போகும். Food aversion எனப்படும் உணவின் மீதான விருப்பமின்மை ஏற்பட்டுவிடும். இவர்கள் குளிர்ச்சியாக ஆகாரம் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டால் இப்பிரச்னையிலிருந்து மீண்டுவிடலாம். நொய் கஞ்சி, மோர், நீராகாரம், இளநீர், பச்சை வாழைப் பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com