உங்களுக்கு ருத்ராட்சம் அணிய விருப்பமா? இதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

வடமொழியில் ருத்ராட்ஷம் என்பதற்கு ருத்திரனின் கண்கள் என்று அர்த்தம். ருத்ராட்சம் அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுமாம்.
உங்களுக்கு ருத்ராட்சம் அணிய விருப்பமா? இதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

நான் சிவ பக்தை என்பதால் சிறு வயதிலிருந்து ஸ்படிகம், ருத்ராட்ஷம் அணிந்து பழக்கப்பட்டவள். வீட்டில் பொன் நகைகள் வாங்கிக் கொடுத்தும், எனக்கு தங்கத்தை விட ருத்ராட்ஷத்தின் மீதே ஈர்ப்பு அதிகமிருந்தது. வளர் இளம் பருவத்தில் பெண்கள் ருத்ராட்ஷம் அணியக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னதால், மனம் ஒப்பாமல் அணிவதை நிறுத்தினேன். உள் மனத்தில் சிவ சிந்தனையும், ருத்ராட்ஷத்தின் அணிவதற்கான விழைவும் இருந்து வந்தது. அதன் பின் குருவின் ஆசியுடன் ஜபம் செய்ய தொடங்கியபோது ருத்ராட்ஷம் மீண்டும் என் கரங்களில் வந்து சேர்ந்தது. அதன்பின் கடந்த பத்து ஆண்டுகளாக ருத்ராட்ஷத்தைத் தொடர்ந்து அணியத் தொடங்கினேன்.

தியானம் செய்யும் போது மனம் ஒருநிலைப்படவும், தியானமற்ற சமயங்களிலும் எதிர்மறை எண்ணங்கள் வந்துவிடாமலும் ருத்ராட்ஷம் ஒரு அரண் போல என்னைக் காப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இது மூடப் பழக்கம், உனக்கேற்பட்ட கற்பனை என்று பிறர் என்னிடம் சொல்வதுண்டு. ஆனால் நமக்கு எது சரியென்று படுகிறதோ அதைக் கடைபிடிக்கும் பழக்கம், அதுவும் அது நல்ல பழக்கமாக இருக்கும்போது எதிர் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். என்னுடைய கணினியில் ஒரு ஃபோல்டரில் ருத்ராட்ஷத்தைப் பற்றிய பல குறிப்புக்கள் உள்ளன. அண்மையில் வாட்ஸப்பிலும் இது குறித்து ஒரு செய்தி வந்தது. அவற்றை எல்லாம் தொகுத்து ருத்ராட்ஷத்தைப் பற்றிய ஒரு பதிவை இங்கு பகிர்ந்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.

வடமொழியில் ருத்ராட்ஷம் என்பதற்கு ருத்திரனின் கண்கள் என்று அர்த்தம். ருத்ராட்சம் அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுமாம். எனவே அனைவரும் ஐந்து முக ருத்ராட்ஷத்தையாவது எப்போதும் கண்டிப்பாக அணிய வேண்டும்.

ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது. ganitrus என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த ருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. அவற்றுள் நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப்படுகிறது.

இயற்கையில் ருத்ராட்ஷம் செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும், அல்லது சாயமேற்றப்பட்டிருக்கும். நல்ல ருத்ராட்சத்தை கண்டுபிடிக்க அதனை நீரில் போட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும். மூழ்கினால் அது நல்ல ருத்திராட்சம், மிதந்தால் அது போலி. அல்லது பழங்கள் அல்லது உணவுப் பொருட்களுக்கு சற்று மேலே உயரப் படித்தால் அது லேசாக ஒரு அதிர்வினை ஏற்படுத்தி கடிகார முகமாக சுழலும். அதுவே சிறந்த ருத்ராட்சம்.

ருத்ராட்ஷம் அணிவது நமது உடம்புகாக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது எனும் நம்பிக்கையை அதை அணிபவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் ஞானம் அடைவார்கள். வீட்டினில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு தெளிந்த சிந்தனையும், தீர்க்கமாக முடிவெடுக்கும் பக்குவத்தையும் தரும்.

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.

பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள். எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா
நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.

ருத்ராட்ஷம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என யார் அணிந்தாலும் மனமும், உடலும் தூய்மை அடையும். ஆனால் அதை அணியும் போது சில விஷயங்களைக் கடைபிடிக்கத் தயாராக இருக்க வேண்டும். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல்,
புகை பிடித்தல், அசைவம் உண்ணுதல் போன்றவற்றை விட்டு விட வேண்டும். அல்லது அசைவம் சாப்பிடும் நாட்களில் ருட்ராட்ஷத்தை கழட்டி வைத்துவிடுவது நல்லது.

திதி, பெண்கள் தீட்டு, தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா என்ற சந்தேகம் சிலருக்கு எழுவதுண்டு. இந்த மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும்போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?

ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.

எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. இறைவனின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து.பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

ஒரு முகம் கொண்ட ருத்ராக்க்ஷம்
 
இதை அடைவது மிகவும் கடினம். இது இறைவன் திருப்பிறப்பாக கருதப்படுகிறது இதை ஒரு பார்வை பார்த்தாலும் அல்லது ஒரு முறை இதை தொட்டாலும், உங்களது பாவங்களை எல்லாம் நீங்கும். இதை அணிந்தால், சிவ தத்துவம் எங்கும் பரவியுள்ளதை ஒருவா் உணர முடியும் ஒருவா் அவரது விருப்பங்கள் பூா்த்தி அடைந்து முக்தியடைவார்.

இரண்டு முகங்கள்

இரண்டு முகம் கொண்ட மணிகள் மிகவும் அபூா்வமானவை இதுவும் அதிகம் கிடைக்காது அதனால் விலை அதிகமாக இருக்கும். இது சிவனும் சக்தியும் கூடிய அா்த்த நாரீஸ்வரரின் ஸ்வரூபமாகும். இதன் கிரகம் சந்திரன். இதனை அணிவதால் விலங்குகளைக் கொன்ற கொலை பாவம் போகும், கொடும் பாவமான பசுவைக் கொன்ற கோஹத்தி தோஷம் கூட விலகிவிடும். இதை அணிபவா்கள் செல்வம், மகிழ்ச்சி, மன அமைதி, மனதை ஒருமுகப்படுத்துதல், குண்டலினியை எழப்புதல் ஆகியவற்றைப் பெறுவர்.

மூன்று முகங்கள்:

மூன்று முகம் கொண்ட மணிகளும் அரிதானது, சாதாரணமாகக் கிடைப்பதில்லை, விலை அதிகமானதே. இது சோம சூரிய அக்கினி எனும் சிவனின் முக்கண் வடிவானவை. சூரியன், சந்திரன், அக்கினி தேவன் மூவருமே இதற்கு அதிபதிகளாவர். இதன் கிரகம் அங்காரகன் எனும் செவ்வாய் இதனை அணிவதால் பெண்களைக் கொன்ற பசு ஹத்தி தோஷம் கூட விலகும், பலவகை பாவங்கள் எரிந்து சாம்பலாகும். மேலும் இதனை அணிந்தவன் ஆன்மிகத்தில் மிக உயா்ந்த நிலைகளை எளிதாக அடைவான். சிவனின் பூரண அருள் கிடைக்கும்.

நான்கு முகங்கள்:

இது பிரும்மாவைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை அணிந்தால் பக்தி, செல்வம், மகிழ்ச்சி, மோட்சம், ஆகியவற்றைப் பெறலாம். இருள் அழிக்கப்பட்டு.அறிவுக்கூா்மை என்னும் வெளிச்சம் பிரகாசிக்கும். பேரின்பத்தை அடையலாம். இதன் கிரகம் புதன், எனவே இதனை கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர் என அனைத்து துறைகளிலும் உள்ள படைப்பாளிகள் அணியலாம் கல்வி, கலைத்திறன், நுண்கலைகள் வளா்ச்சி பெறும்

ஐந்து முகம் கொண்ட மணிகள்

இவை சாதாரணமாக கிடைப்பவை, விலையும் குறைவு, இது காலாக்கினிருத்திர ஸ்வரூபம் உடையது. அகோரம், தத்புருஸ்ம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் சிவனின் ஜந்து முகங்கள் இதற்கு அதிதேவதைகள். இதன் கிரகம் குரு இதனை அணிவதால் மாமிசம் முதலான உண்ணத்தகாத உணவுகளை உண்ட பாவம் தீரும். பலவகை பாவங்கள் நசிந்து, சிவ கடாட்ஷம் கிடைக்கும். உண்ணும் உணவில் உள்ள விஷக் குற்றங்கள் விலகும்.

ஆறுமுகம் :

ஆறுமுகம் கொண்ட மணிகள். அதே போல் ஆறு முகங்கள் கொண்ட ஷண்முகா் வடிவானவை. இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகளை அணிந்து கொண்டால் தமிழ்க் கடவுளான முருகன் அருள் பெருகும். பிராம்மணா்களை கொன்ற பழி பாவங்கள் நிங்கி அனைத்திலும் வெற்றி கிட்டும் புகழ் பெருகும் புத்தி தெளிவும் மெய்ஞானமும் பரிசுத்தமும் வாய்க்கும்.

ஏழு முகம்:

ஏழ முகங்கள் கொண்ட மணிகளும் மிக அரிதானவை. பிரம்மதேவன் கட்டளையினால், கீழே உலகங்களை அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மஹாதலம் எனும் சப்பதலோகங்களைில் உள்ள நாகா்களின் தலைவனாக இருந்து ஆயிரம் தலைகளோடு கூடிய பூமியைத் தாங்கிய ஆதிசேஷன் அம்சமானவை. இ்வ்வகை மணிகளை அணிவதால் பசுக்கொலை செய்த கோஹத்தி பாவமும் போகும் .

பிறா் பொன் பொருளைத் திருடிய பாவங்கள் விலகும் சப்த்தமாதாக்களின் சப்த கன்னிகளின் பேரருள் கிட்டும்.நாதோஷங்கள் நிவா்த்தியாகும். கல்வி, நுண்கலைகள் மேம்படும் யோகசக்திகள் கைவரும். சிலா் சப்தமாதா்களும் சப்தகன்னிகளும் கூட இதற்கு பிரதிதேவதை என்பாா்கள்.

எட்டு முகம்:

எட்டு முகம் கொண்ட மணிகளும் அரிதானவை எளிதில் கிடைக்காதை இ்வ் வகை மணிகள், பல்லாளேச கணபதி, வரத கணபதி, சிந்தாமணி கணபதி, மயூரேச கணபதி, சத்தி கணபதி, மஹா கணபதி என்று அஷ்ட கணபதி ஸ்வரூபபானவை. இதன் கிரகம் ராகு. இதனை அணிந்து கொண்டுடால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கி்ட்டும். குருவை கொன்று குருபத்தினியைத் தீண்டிய கொடும் பாவங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் பொன் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமா சித்திகளும் வாய்க்கும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கி்ட்டும் பல வகையில் வரும் காரியத் தடைகள் அகலும். கங்கை தேவி மகிழ்ந்து அருள் புரிவாள்.

ஒன்பது முகம்:

ஒன்பது முகம் கொண்ட மணிகள் மிக அரிது. கயிலை மலையின் எண் திசைகளிலும் காவல் புரியும் தேவதைகளான அசிதாங்க பைரா், ருபைரவா், சண்டபைரவா், குரோதபைரவா், உன்மத்தபைரவா், கபாலபைரவா், சம்ஹரபைரவா் என்ற அஷ்ட பைரா்களின் உற்பத்திக்கு மூலகாரணன் ஆன மஹா பைரவா் ஸ்வரூபமானவைகளே இந்த ஒன்பது முகம் கொண்ட ருத்திராக்க்ஷமணிகள். இதன் கிரகம் கேது இதனை அணிவதால் பில்லி சூனியம் விலகும் பலவகை கொலை பாவங்கள் பாம்புகளால் வரும் துன்பங்கள் நீங்கும் நவக்கிரஹ பீடைகள் விலகி, நவசக்திகளின் பேரருள் கிட்டும் சித்தி முக்தி எற்படும் (இடது கை மணிக்கட்டில் அணிய வேண்டும்).

பத்து முகம்:

பத்து முகம் கொண்ட மணிகள் அரிதானவை.இம் மணிகள் மத்ஸ்ய, கூா்ம, நிரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி அதாரங்களின் நாயகனான ஸ்ரீவிஷ்ணுவின் ஸ்வரூபமானவை இவற்றை அணிவதால் பூத, பிரேத, பைசாச, பிரம்மராக்ஷசா்களால் ஏற்படும் ஆபத்துகள் விலகும். ஏவல் பில்லி சூனியங்கள் வலுவிழந்து போகும். பலவகையான பீடைகளிலிருந்து காப்பாற்றப்படுவீா்கள். மிருகங்களால் வரும் ஆபத்துகள் விலகும்

பதினொரு முகம்

பதினொரு முகம் கொண்ட மணிகளும் மிகவும் அபூா்மானவை எளிதில் கிடைக்காதவை இவ்வகை மணிகள், மஹாதேவன், அரன், ருத்திரன், சங்கரன், நீலோஹிதன், ஈசானன், கபாலி, சௌமியன் என்ற எகாதச ருத்திரா்களின் அம்சமானவை. இவற்றை அணிந்து கொண்டால், பலவகை உயிரினனங்கள், பறவைக் என பிராணிகளை கொன்ற பாவம் நீங்கும் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள அஸ்வமேதாயகம் முதலான அனைத்து விதமான யாகங்களையும், விரதங்கள் பூஜை புண்ணியம் வரும், சிவஞானம் சித்திக்கும்.

ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்ட பலன்கள் இவைதான் :

நீராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு இறைவனின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் கூறுகிறது

இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும் போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டாம். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லி வந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக் கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் உணவளிக்கிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் ருத்ராட்சம் அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவபூர்வமாக உணரலாம்.

ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவர் கருணை செய்தால்தான் ருத்ராட்சம் அணிந்து அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.

ஓம் நமசிவாய வாழ்க !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com