அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனம் அதன் புதிய 4ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ.49-க்கு 1 ஜிபி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் புதிய 4ஜி வாடிக்கையாளர்களுக்கு "ஜாய் ஆஃப் ஹோலி' என்ற திட்டத்தின் கீழ் அறிமுக சலுகையாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஆர்காம் 4ஜி வாடிக்கையாளர்களின் 1ஜிபிக்கான டேட்டா கட்டணம் வெறும் ரூ.49-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றொரு திட்டத்தின்படி 3ஜிபிக்கான பிக்கான கட்டணம் ரூ.149-ஆகவும், அத்துடன் ஆர்காம் இணைப்புகளுக்கிடையில் வரையரையில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதற்கான வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.303 கட்டணத்தில் 28ஜிபி டேட்டாவை வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுதவிர, "பிரைம்' வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5ஜிபி டேட்டாவை வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போட்டியை எதிர்கொள்ளும் விதமாக, ஆர்-காம் நிறுவனமும் டேட்டாவுக்கான கட்டணத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது.