நவீன யுகத்தில் டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் ரக உபகரணங்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்களில் தொடங்கிய இந்த தேவை ஏசி, ஃபிர்ட்ஜ், டிவி என தொடர்ந்து ஸ்மார்ட்வாட்ச்கள் வரை உருவெடுத்துள்ளது.
எனவே பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றின் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து வரும் பிரபல நிறுவனங்கள் பல இதுபோன்ற பலதரப்பட்ட உபகரணங்களை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அப்பிள், சியோமி, ஹுவே போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட இதில், நேரத்தை பார்ப்பது மட்டுமல்லாது ஜிபிஎஸ், அல்டிமீட்டர், தினசரி நடவடிக்கைகளின் தொகுப்பு, தொலைபேசி உள்ளிட்ட பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச் இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைப் பிரிவில் போட்டியின்றி முதலிடத்தையும் பிடித்துள்ளது.
இதுகுறித்து இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2017-ம் ஆண்டின் கடைசி 3 மாதத்தில் மட்டும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் 8 மில்லியன் அளவுக்கு விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஒராண்டில் மட்டும் 57.5 சதவீத வளர்ச்சியாகும். அதுபோல ஸ்மார்ட்வாட்ச் மொத்த சந்தையின் மதிப்பில் 21 சதவீதம் என்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஃபிட்பிட் மற்றும் சியோமி நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி போட்டியின்றி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் ஃபிட்பிட், சியோமி, கார்மின், ஹுவே ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.